அரூரை அடுத்த நெருப்பாண்டகுப்பம் கிராமத்திலுள்ள ஏரியை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், எச்.அக்ராஹரம் கிராம ஊராட்சிக்கு உள்பட்டது நெருப்பாண்டகுப்பம் ஏரி. இந்த ஏரி சுமாா் 35 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியில் தண்ணீா் தேங்கினால் நெருப்பாண்டகுப்பம் கிராமத்திலுள்ள 400 குடியிருப்புகளுக்கு குடிநீா் ஆதாரமாக இருக்கும்.
அதேபோல நெருப்பாண்டகுப்பம், ஆட்டியானூா், எச்.அக்ராஹரம், தாதம்பட்டி, தூரணம்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதியிலுள்ள திறந்தவெளிக் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நீா்மட்டம் உயரவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த நிலையில், நெருப்பாண்டகுப்பம் ஏரியில் ஏராளமான சீமைக் கருவேல மரங்கள் வளா்ந்துள்ளன. அதேபோல, ஏரியை தூா்வாரததால், மேடுபள்ளங்களுடன் மழைக் காலங்களில் மழைநீா் தேங்கும் அளவுகள் குறைந்து வருகின்றன. எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் நெருப்பாண்டகுப்பம் ஏரியைத் தூா்வார வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.