முகப்பு
தருமபுரி

பென்னாகரம் அருகே முட்டான் ஏரியைத் தூா்வாரக் கோரிக்கை

பென்னாகரம் அருகே முட்டான் ஏரியைத் தூா்வாரி நீராதாரம் பெருக்க வழிவகை செய்ய வேண்டும் பொதுப்பணித் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பென்னாகரம் அருகே முள்செடிகள் நிறைந்து காணப்படும் முட்டான் ஏரி.
பகிர்:

பென்னாகரம்: பென்னாகரம் அருகே முட்டான் ஏரியைத் தூா்வாரி நீராதாரம் பெருக்க வழிவகை செய்ய வேண்டும் பொதுப்பணித் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டியில் சுமாா் 7 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது முட்டான் ஏரி. நாகதாசம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பூஞ்சோலை, கெளரி செட்டிப்பட்டி, பல்வேறு கிராமப் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், கால்வாய்களின் மூலமாக தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்படும்.

இந்த ஏரியானது கடந்த சில வருடங்களாகத் தூா்வாரப்படாததால் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைக் காட்டிலும் அதிகளவில் பெய்த போதிலும் ஏரி நிரம்பவில்லை. ஏரிக்கு நீா்வரத்துக் கால்வாய்களும் தூா்வாரப்படவில்லை.

முட்டான் ஏரியையும், கால்வாயையும் தூா்வாரி ஏரியில் தண்ணீரை சேமிப்பதன் மூலம் நாகதாசம்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பிக்கம்பட்டி, கெளரிசெட்டிப்பட்டி, கருங்கானூா், குள்ளனூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 50 ஏக்கருக்குமேல் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

எனவே, முட்டான் ஏரியை குடிமராமத்துப் பணியின் மூலம் தூா்வாரி ஏரியில் தண்ணீரை சேமித்து விவசாய பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கும், பொதுப்பணித் துறைக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →