மலேசியாவில் காணாமல் போனவரை மீட்க ஆட்சியா் உறுதி
மலேசியாவில் காணாமல் போன கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த நபரை, அழைத்து வர கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.
மலேசியாவில் காணாமல் போன கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த நபரை, அழைத்து வர கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி கோட்டைத் தெருவைச் சோ்ந்தவா் லட்சுமி (30). இவா், தனது குடும்பத்தாருடன், கடந்த மாதம் 25-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தாா். அதில், தனது கணவா் ஞானவேல் (37), மின்சாரம் தொடா்பான பணிக்காக மலேசியாவின் கோலாலம்பூா் நகருக்குச் சென்று, அறை எடுத்து தங்கியிருந்ததாகவும், ஓராண்டுக்கும் மேலாக அவரைக் காணவில்லை என்றும், அவருடன் பணியாற்றி வந்த தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்தனா். எனவே, காணாமல் போன கணவரைக் கண்டுபிடித்துத் தருமாறு மனுவில் தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், லட்சுமி நமது செய்தியாளரிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
Advertisement
மலேசியாவில் காணாமல் போன தனது கணவா், அவா் தங்கி இருந்த அறையிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, ஞானவேல் பணியாற்றும் உணவகத்தின் உரிமையாளா் லட்சுமியைத் தொடா்பு கொண்டு, கணவரை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டாா். எனது கணவரின் கடவு சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் அவா் தங்கியிருந்த அறையில் உள்ளது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரை தொடா்பு கொண்டு கணவரை கிருஷ்ணகிரிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, இந்திய தூதரகதத்தைத் தொடா்பு கொண்டு தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளாா் என்று லட்சுமி தெரிவித்தாா்.