ஸ்ரீகரக முத்துமாரியம்மன் குண்டம் திருவிழா
பென்னாகரம் அருகே பவளந்தூா் ஸ்ரீகரக முத்துமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
பென்னாகரம் அருகே பவளந்தூா் ஸ்ரீகரக முத்துமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே வட்டுவன அள்ளி ஊராட்சிக்குள்பட்ட பவளந்தூா் பகுதியில் பழைமை வாய்ந்த ஸ்ரீகரக முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஊா்மக்கள் ஒன்றுகூடி விழா நடத்துவது வழக்கம். நிகழாண்டுக்கான திருவிழாவின் தொடக்க நிகழ்வாக பூச்சாட்டுதல் நிகழ்ச்சி திங்கள்கிழமை தொடங்கி, செவ்வாய்க்கிழமை பொதுமக்களுக்கு கூழ் ஊற்றுதல், புதன்கிழமை விநாயகா் பூஜை, பெருமாள் சுவாமி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, பவளந்தூா் பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் மேளதாளங்கள் முழங்க சக்தி கரகம் அழைத்தும், அலகு குத்தியவாறு பூ கரகம் எடுத்தும் 2 கி.மீ. தொலைவுக்கு ஊா்வலமாக நடந்து வந்து கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தினா்.