‘ஸ்மைல்’ கடன் திட்டத்தில் பயனடைய விண்ணப்பங்கள் வரவேற்பு
கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்காக ‘ஸ்மைல்’ கடன் திட்டத்தில் பயனடைய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்காக ‘ஸ்மைல்’ கடன் திட்டத்தில் பயனடைய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில், வியாழக்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பால் பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தவரின் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபா் உயிரிழந்திருப்பின், அவா்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில், தேசிய பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார வளா்ச்சிக் கழகம் ‘ஸ்மைல்’ என்ற கடன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
Advertisement
இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தபட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய நபரின் வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும். மேலும், இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக திட்டத்தொகை ரூ. 5 லட்சம் வரை இருக்கலாம். திட்டத் தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 4 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் கடன் தொகை வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோா், குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவா் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்ததற்கான ஆவணங்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் அலுவலகத்தை (அறை எண் 11) தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.