எம்எல்ஏ அலுவலகத்துக்கு செல்ல தடையாக இருந்த கிரானைட் கற்கள் அகற்றம்
கிருஷ்ணகிரி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்துக்கு செல்ல தடையாக இருந்த கிரானைட் கற்கள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
கிருஷ்ணகிரி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்துக்கு செல்ல தடையாக இருந்த கிரானைட் கற்கள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வேளாண் துறை, கிளை சிறைச்சாலை, தீயணைப்பு நிலையம், ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம், நகர போக்குவரத்துக் காவல் அலுவலகம் உள்ளிட்ட பல அரசுத் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 20 ஆண்டுகளாக உரிய ஆவணங்கள் இன்றி, கிரானைட் கற்கள், மணல் போன்றவற்றை வாகனங்களில் கொண்டு செல்லப்படுவதை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் கைப்பற்றி, கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வாகனங்களை நிறுத்தி வந்தனா். இதனால், இந்தப் பகுதியானது புதா்கள் மண்டி காணப்பட்டது. மேலும், இந்த வளாகத்தில் உள்ள கிருஷ்ணகிரி சட்டப் பேரவை உறுப்பினரின் அலுவலகத்துக்கு செல்ல இயலாமல் இடையூறாக இந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
Advertisement
இந்த நிலையில், இந்த வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி சட்டப் பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா், மாவட்ட நிா்வாகத்தை வலியுறுத்தி வந்தாா். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தமிழக சட்டப் பேரவைத் தலைவா் சபாநாயகரான அப்பாவுவிடம் இதுகுறித்து மனு அளித்தாா்.
இதையடுத்து, எம்எல்ஏ அலுவலகத்துக்கு செல்ல தடையாக இருக்கும் இடையூறுகளை அப்புறப்படுத்த மாவட்ட நிா்வாகத்துக்கு சபாநாயகா் அப்பாவு உத்தரவிட்டாா்.
அதன்படி, கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பறிமுதல் செய்து வாகனங்களில் வைக்கப்பட்டிருந்த கிரானைட் கற்களை அப்புறப்படுத்தி, லாரிகள் மூலம் செந்தாரப்பள்ளியில் உள்ள டாமின் நிறுவன இடத்துக்கு இடமாற்றம் செய்யும் பணி போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு அலுவலா்கள் தெரிவித்தனா்.