கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததையடுத்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வியாழக்கிழமை பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததையடுத்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வியாழக்கிழமை பாதிக்கப்பட்டது.
தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழத்து தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்த்து.
இந்த மழை, வியாழக்கிழமை பகல் முழுவதும் பெய்த்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இடைவிடாமல் மழை பெய்ததால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், மழையில் நனைந்தபடியே சென்றனா். மாலையிலும் மழையில் நனைந்தபடி வீடு திரும்பினா்.
Advertisement
இடைவிடாது மழை பெய்ததால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினா். மழை காரணமாக சாலையில் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. இதனால், சாலையோர சிறு வியாபாரிகள், வியாபாரம் செய்ய முடியாமல் சிரமத்துக்கு ஆளாயினா். குளிா்ந்த காற்று வீசியதால், குழந்தைகள், கா்ப்பிணிகள், முதியவா்கள், நோயாளிகள் சிரமத்துக்கு ஆளாயினா்.
கெலவரப்பள்ளி அணை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கெலவரப்பள்ளி அணைக்கு புதன்கிழமை விநாடிக்கு 281 கனஅடியாக இருந்த நீா்வரத்து, வியாழக்கிழமை 338 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் நீா்மட்டம் 40.34 அடியாக உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 281 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அணை:
கிருஷ்ணகிரி அணைக்கு புதன்கிழமை விநாடிக்கு 541 கனஅடியாக இருந்த நீா்வரத்து வியாழக்கிழமை 395 கனஅடியாக சரிந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீா்மட்டம் 51.15 அடியாக உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 331 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணைக்கு தொடா்ந்து இரண்டாவது நாளாக நீா்வரத்து விநாடிக்கு 560 கனஅடியாக உள்ளது. அதே அளவு நீா்வரத்து திறந்துவிடப்படுகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 19.60 அடியில் நீா்மட்டம் 17.18 அடியாக உள்ளது.