முகப்பு
நாமக்கல்

7 நாள்களில் 59,000 கிலோ உலர் தீவனம் மானிய விலையில் விநியோகம்

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு உலர் தீவனம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட 7 நாள்களில் மொத்தம் 59 ஆயிரத்து 60 கிலோ உலர் தீவனம் ரூ. 4 லட்சத்து 99 ஆயிரத்து 648-க்கு வாங்கப்பட்டு 695 கால்நடை

Updated On : 20 மார்ச், 2017 at 4:05 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:46 PM

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு உலர் தீவனம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட 7 நாள்களில் மொத்தம் 59 ஆயிரத்து 60 கிலோ உலர் தீவனம் ரூ. 4 லட்சத்து 99 ஆயிரத்து 648-க்கு வாங்கப்பட்டு 695 கால்நடை வளர்ப்போருக்கு மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறையை போக்கிட மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் உலர் தீவன மையங்களை அரசு அமைத்துள்ளது. இங்கு 1 கிலோ ரூ. 8.46-க்கு விற்கப்படுகின்ற உலர் தீவனத்தை (வைக்கோல்) ரூ. 6.46 மானியமாக அளித்து ரூ. 2-க்கு மட்டுமே கால்நடை வளர்ப்போருக்கு வழங்கிட
உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் களங்காணி, எருமப்பட்டி, ஆண்டகலூர் கேட், கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, மோர்ப்பாளையம், மாணிக்கம்பாளையம், குப்பாண்டம்பாளையம், ஆனங்கூர், காதப்பள்ளி ஆகிய 10 இடங்களில் உலர் தீவன மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு மையத்துக்கு தலா ரூ. 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 250 டன் அளவுக்கு வைக்கோல் கொள்முதல் செய்யப்படுகிறது. கால்நடைகளுக்கு உலர் தீவனங்கள் வழங்கும் திட்டம் கடந்த 8-ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஒரு கால்நடைக்கு தினம் 3 கிலோ வீதம் அதிகபட்சமாக 5 கால்நடைகளுக்கு ஒரு வாரத்துக்கு 105 கிலோ வரை ஒரு விவசாயிக்கு மானிய விலையில் உலர் தீவனம் வழங்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 7 நாள்களில் மொத்தம் 59 ஆயிரத்து 60 கிலோ உலர் தீவனம் ரூ. 4 லட்சத்து 99 ஆயிரத்து 648-க்கு வாங்கப்பட்டு 695 கால்நடை வளர்போருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரூ. 3 லட்சத்து 81 ஆயிரத்து 528 மானியத்தில், ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 120 மதிப்பீட்டில் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் 3,475 கால்நடைகள் பயனடைந்துள்ளன.
மானிய விலையில் உலர் தீவனம் பெற விரும்பும் கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குச் சென்று பதிவு செய்து கொண்டு அதற்கான அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்துள்ள கால்நடை வளர்ப்போரின் பதிவு முன்னுரிமை அடிப்படையில் உலர் தீவனம் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.