திருச்செங்கோடு அருகே பெண் அடித்துக் கொலை
திருச்செங்கோட்டை அடுத்த டி. சாலப்பளையத்தில் பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
திருச்செங்கோட்டை அடுத்த டி. சாலப்பளையத்தில் பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
சாலப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (45). தறிப்பட்டறையில் வேலை செய்து வந்தார். இவரது கணவர் பாண்டிராஜன் (50) மூன்று வருடங்களுக்கு முன்பே இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு வெங்கடேசன் (25), கண்ணன் (23) ஆகிய மகன்களும் ஆனந்தி (22) என்ற மகளும் உண்டு.
வெங்கடேசனுக்கு திருமணமாகி மனைவியுடன் ஆனங்கூரிலும், ஆனந்திக்கு திருமணமாகி கணவருடன் சங்ககிரியிலும் வசித்து வருகின்றனர். தறிப்பட்டறையில் வேலை செய்யும் கண்ணனுக்கு திருமணமாகவிலலை. அவர் தாயுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், தாயும் மகனும் சனிக்கிழமை இரவு சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனர். கண்ணன் வீட்டுக்குள்ளேயும், தாய் ராஜலட்சுமி வீட்டுக்கு வெளியேயும் தூங்கிக் கொண்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணியளவில் ராஜலட்சுமி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
அப்போது ராஜலட்சுமி வீட்டின் கதவும், அவரது எதிர்வீட்டின் கதவும் வெளிப்புறமாக தாழ் போடப்பட்டிருந்தது.
ஒரு வழியாக வீட்டின் கதவைத் திறந்து வந்த மகன் கண்ணன் தாயை ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு, உதவி கண்காணிப்பாளர் ராமசாமி, துணைக் கண்காணிப்பாளர் சண்முகம் ஆய்வாளர் பாரதிமோகன் ஆகியோர் பார்வையிட்டனர். மோப்ப நாய் பொதிகை வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களைப் பதிவு செய்தனர்.
இந்தக் கொலையில் ராஜலட்சுமி அணிந்திருந்த நகைகள் எதுவும் திருடுபோகவில்லை. அதனால் நகைக்காகவோ, பணத்துக்காகவோ இந்தக் கொலை நிகழவில்லை. முன்விரோதம் அல்லது குடும்ப பிரச்னை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.