நாமக்கல்லில் 2.5 கிலோ எடையுடைய யானை தந்தங்கள் பறிமுதல்: 2 பேரை பிடித்து வனத்துறை விசாரணை
திருச்செங்கோட்டில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.5 கிலோ யானை தந்தத்தை வனத்துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல்: திருச்செங்கோட்டில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.5 கிலோ யானை தந்தத்தை வனத்துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக இருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இறந்து கிடந்த யானையின் தந்தங்களை வெட்டியதாக சிலர் கைது செய்யப்பட்டனர். தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலும் ஆங்காங்கே யானைகள் மரணம் என்பது தொடர்கதையாக உள்ளது. இவ்வாறான சூழலில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் ஒரு வீட்டில் இரண்டு தந்தங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினர் மூலம் மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற வனத்துறையினர் பதுக்கி வைத்திருந்த தந்தங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ஆர்.காஞ்சனா செய்தியாளர்களிடம் கூறியது: காவல்துறை மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் திருச்செங்கோட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு ஜோடி தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவை எங்கிருந்து வந்தன, இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்புடையது என்பது குறித்து எங்கள் பிடியில் உள்ள இருவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். தந்தங்கள் 2.5 கிலோ எடை உடையது. கடத்தியது தெரியவந்தால் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-இன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பிடிபட்டவர்களின் விவரங்கள், இதர தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றார்.