போதமலை கிராமத்திற்கு தலைச்சுமையாக கொண்டுசெல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்
ராசிபுரம்(தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள போதமலை கிராமத்திற்கு கீழூர், மேலூர், கெடமலை என 3 குக்கிராமங்கள் உள்ளன.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம்(தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள போதமலை கிராமத்திற்கு கீழூர், மேலூர், கெடமலை என 3 குக்கிராமங்கள் உள்ளன.
கீழூர் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த மலை கிராமத்தில் 453 ஆண் வாக்காளர்கள் 449 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 902 வாக்காளர்கள் உள்ளனர். இந்த மலை கிராமத்திற்கு கீழூர் கெடமலை ஆகிய இரு கிராமங்களில் தனித்தனியாக வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த இரு வாக்குபதிவு மையங்களுக்கும் இன்று காலை சுமார் 10 மணி அளவில் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள, மை, எழுது பொருள்கள் உள்ளிட்ட உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டு அடிவாரத்திலிருந்து தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலர்கள், வருவாய் உதவியாளர்கள் தலைச்சுமையாக போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரத்தை ஒற்றையடிப்பாதையில் எடுத்துச் சென்றனர்.
பாதை வசதி இல்லாத இந்த மலைப் பகுதிக்கு ஏழு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வாக்குபதிவு மையத்திற்கு சுகாதாரப் பணியாளர்கள், வனத்துறையினர், காவலர்கள் உள்ளிட்ட 12 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு முழுவதும் மொத்தம் 24 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வழக்கமாக வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்துவதற்கு முன்பாக வாக்குப்பெட்டி இருந்த காலகட்டத்தில் இந்த மலை கிராமத்திற்கு பெட்டிகளை கழுதை மேல் வைத்து எடுத்துச் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.