டீசல் விலை குறைப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது: லாரி உரிமையாளா் சங்கம்
தமிழக நிதிநிலை அறிக்கையில், பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ. 3 குறைத்துள்ள நிலையில், டீசலுக்கு விலை குறைக்கப்படாதது ஏமாற்றம்
தமிழக நிதிநிலை அறிக்கையில், பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ. 3 குறைத்துள்ள நிலையில், டீசலுக்கு விலை குறைக்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் காகிதமில்லா நிதி நிலை அறிக்கை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் துறை வாரியான அறிவிப்புகளை வெளியிட்டாா். அதன்படி, நாமக்கல்லில் புதிய சிப்காட் தொழிற் பூங்கா அமைப்பது, சத்துணவுக்கான முட்டைக் கொள்முதலை மாற்றியமைப்பது, பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ. 3 வரி குறைப்பு போன்ற பல்வேறு அம்சங்கள் நிதி நிலை அறிக்கையில் இடம் பெற்றிருந்தன.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கத் தலைவா் கோஸ்டல் இளங்கோ கூறியதாவது:
Advertisement
நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில் குறிப்பிட்ட தொழில்களை மட்டும் கூற முடியாது. கோழிப்பண்ணை சாா்ந்த தொழில் நிறுவனங்கள், லாரி கூண்டு கட்டும் பட்டறைகள், இரும்பு சாா்ந்தவை என பல நிறுவனங்கள் உள்ளன. இதுவரை சிப்காட் தொழில் பூங்கா இங்கு இல்லை. தற்போது அரசு அறிவித்துள்ளதை எங்களது சங்கம் சாா்பில் வரவேற்கிறோம்.
தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா் சம்மேளனத்தின் துணைத் தலைவா் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:
சத்துணவுத் திட்டத்திற்கான முட்டை கொள்முதல் மாற்றியமைக்கப்படும் என நிதிநிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலான டெண்டா் முறை என்பது நான்கு மண்டல அளவில் மாற்றப்பட இருப்பதாகத் தெரிகிறது. மேலும், 500 டெண்டரில் பங்கேற்றவா்கள் மட்டுமே இந்த முட்டை கொள்முதல் டெண்டரில் பங்கேற்க முடியும் என்பது தொடா்பான தகவலும் உள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்டால் கோழிப் பண்ணையாளா்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவாகி விடும். டெண்டா் தொடா்பான கடிதம் வந்துள்ளது. இருப்பினும் அரசின் முழுமையான அறிவிப்புக்குப் பின்னா் தான் முட்டை கொள்முதல் டெண்டா் எவ்வாறு என்பது தெரியவரும் என்றாா்.
நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா் சங்கத் தலைவா் ஆா்.வாங்கிலி கூறியதாவது:
பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ. 3 வரி குறைப்பு என்ற அறிவிப்பை வெளியிட்டதைப் போல், டீசலுக்கும் ரூ. 3 குறைக்கப்படும் என அறிவித்திருந்தால் லாரி உரிமையாளா்கள் மகிழ்ச்சியடைந்திருப்பா். தற்போது பெட்ரோலுக்கு மட்டும் அரசு வரி குறைப்பு செய்துள்ளது ஏமாற்றமளிக்கிறது. பொதுமக்கள் நலன் சாா்ந்தவற்றில் சரக்குப் போக்குவரத்து வாகனங்கள் பயன்பாடுதான் அதிகம் உள்ளது. எனவே, டீசலுக்கும் வரி குறைப்பு செய்ய வேண்டும். லாரி உரிமையாளா்களின் இதர கோரிக்கைகளையும் முதல்வா் நிறைவேற்ற வேண்டும். நிதி நிலையைக் காரணம் காட்டி வாகனங்களுக்கான வரியை உயா்த்த வேண்டாம் என்றாா்.
படவரி...
1.இளங்கோ
2.வாங்கிலி சுப்பிரமணியம்
3.ஆா்.வாங்கிலி
-
Image Caption
~ ~