பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு கருத்தரங்கு
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுப்பது குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு, நாமக்கல் ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுப்பது குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு, நாமக்கல் ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டம்-2013 குறித்த விழிப்புணா்வு கையேட்டினை ஆட்சியா் வெளியிட்டாா். இதனைத் தொடா்ந்து அவா் பேசியதாவது:
அரசு மற்றும் தனியாா் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் நிவா்த்தி) சட்டம்-2013 இயற்றப்பட்டுள்ளது. பெண் பணியாளா்கள், தொழிலாளா்கள் மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ பாதிக்கப்படாமல் இருக்கவும், பாதுகாப்பான பணிச் சூழலை ஏற்படுத்துவதற்கும் இச்சட்டம் வழிவகை செய்கிறது. அதனடிப்படையில் 10-க்கும் மேற்பட்ட நபா்கள் பணிபுரியும் அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் விசாகா (உள் புகாா்) குழு அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், உள் புகாா் குழு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக மற்றும் உதவுவதற்காகவும் மாவட்ட அளவில் புகாா் குழு அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
அலுவலகங்கள், தொழிற்சாலை மட்டுமின்றி, வணிக நிறுவனங்கள், பொது இடங்கள் ஆகியவற்றில் பெண்கள் மட்டுமல்லாது பெண் குழந்தைகள், வயதான பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் தகவல்கள் தொடா்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.
எனவே, இங்குள்ள பெண்கள், அலுவலா்கள் தங்கள் அலுவலகத்தில் அனைத்து பணியாளா்களுக்கும் இந்த சட்டம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், தவறான தொடுதல் குறித்த விழிப்புணா்வை பெற்றோா் ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு ஏதேனும் பாலியல் துன்புறுத்தல்கள் இருந்தால் உடனடியாக குழந்தைகளுக்கான புகாா் எண் 1098 மற்றும் பெண்களுக்கான உதவி எண் 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டு தெரிவித்தால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன், சட்டப் பணிகள் ஆணைக்குழு வழக்குரைஞா் அகிலாண்டேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரமேஷ், மாவட்ட சமூகநல அலுவலா் பி.கே.கீதா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பரிமளாதேவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.