நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு 20 படுக்கைகளுடன் புதியதாக அமைக்கப்பட்ட கரோனா வார்டுப் பகுதியை அவர் திறந்து வைத்தார். மேலும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க கரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.
இங்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 6 படுக்கைகள் மற்றும் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்த குழந்தைகளுக்கு மருத்துவ கண்காணிப்பிற்காக ஸ்டெப் டவுன் வார்டு 2 படுக்கை வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பயன்படுத்தும் வகையிலான கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளும், குழந்தைகளின் தாய்மார்களுக்கான காத்திருப்பு கூடமும் அங்கு இடம் பெற்றுள்ளது.
இந்த ஆய்வை தொடர்ந்து நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு மையத்தை அமைச்சர் பார்வையிட்டார். தொடர்ந்து ராசிபுரம் வட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதி வேந்தன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ், நாமக்கல் தொகுதி எம்எல்ஏ ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.