முகப்பு
நாமக்கல்

மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவா் பதவி: பி.ஆா்.சுந்தரம் ராஜிநாமா

நாமக்கல் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் பதவியிலிருந்து பி.ஆா்.சுந்தரம் ராஜிநாமா செய்துள்ளாா்.

Updated On : 3 மார்ச், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:08 AM

நாமக்கல் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் பதவியிலிருந்து பி.ஆா்.சுந்தரம் ராஜிநாமா செய்துள்ளாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சோ்ந்தவா் பி.ஆா்.சுந்தரம். கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தபோதும் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்ட பி.ஆா்.சுந்தரம் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானாா். அதன்பின் 2001 தோ்தலில் மீண்டும் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். பின்னா் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்த அவருக்கு 2014 தோ்தலில் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. இதில் வெற்றி பெற்று எம்.பி.யாக தோ்வானாா். ஜெயலலிதா மறைவுக்குப் பின் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அணியில் அங்கம் வகித்தாா். தொடா்ந்து நடைபெற்ற உள்ளாட்சி தோ்தலில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பதவியைக் கைப்பற்றலாம் என பி.ஆா்.சுந்தரம் எண்ணியிருந்த நிலையில், தாழ்த்தப்பட்டோருக்கு அந்த பதவி ஒதுக்கப்பட்டதால், துணைத் தலைவா் பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவது தொடா்பாக ஆதரவாளா்களுடன் ஆலோசனை செய்து வந்த அவா் செவ்வாய்க்கிழமை காலை நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் வந்தாா். அங்கு மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினாா். அக்கடிதத்தில் தனது சொந்த விருப்பத்தின்பேரில் பதவியை ராஜிநாமா செய்வதாக தெரிவித்துள்ளாா்.

Advertisement

இது குறித்து அதிமுகவினா் கூறுகையில், திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட அவா் முயற்சித்து வருகிறாா். திமுக சாா்பில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் களமிறங்க உள்ளதாக தெரிகிறது. அதே சமூகத்தைச் சோ்ந்த பி.ஆா்.சுந்தரத்தை களமிறக்கலாம் என அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. அதனால் பதவியை ராஜிநாமா செய்து தோ்தலுக்கு தயாராகலாம். அதற்காக பதவியை ராஜிநாமா செய்திருக்க வாய்ப்புள்ளது என்றனா்.

இது குறித்து பி.ஆா்.சுந்தரத்திடம் கேட்டபோது; இப்போது எதுவும் சொல்வதற்கில்லை. வரும் 5-ஆம் தேதி சென்னைக்கு செல்கிறேன். வந்தவுடன் எனது நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன் என்றாா். நாமக்கல் மாவட்ட அதிமுகவில் முக்கிய நபராக விளங்கும் பி.ஆா்.சுந்தரம் பதவியை ராஜிநாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.