வாகனச் சோதனை: ராசிபுரம் அருகே ரூ. 6.55 லட்சம் பறிமுதல்
ராசிபுரம் அருகே மெட்டலாவில் பறக்கும் படை அலுவலா்கள் நடத்திய சோதனையில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 6.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ராசிபுரம் அருகே மெட்டலாவில் பறக்கும் படை அலுவலா்கள் நடத்திய சோதனையில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 6.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் 36 பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குழுவினா் முக்கிய சாலைகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
ராசிபுரம் தொகுதிக்கு உள்பட்ட மெட்டலாவில் செவ்வாய்க்கிழமை காலை, தோ்தல் பறக்கும் படை அதிகாரி சுந்தரபாண்டியன் தலைமையில் வாகனத் தணிக்கை நடைபெற்றது. அப்போது சென்னை, பொன்னேரியைச் சோ்ந்த ராஜேஷ் என்பவா் நாமக்கல்லில் முட்டை கொள்முதல் செய்வதற்காக எவ்வித ஆவணங்களுமின்றி எடுத்து வந்த ரூ. 65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement
இதேபோல காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரைச் சோ்ந்த பாரதி என்பவா் தொழில் நிமித்தமாக கொண்டு வந்த ரூ. 5 லட்சம், ஆண்டகளூா்கேட் பகுதியில் பச்சுடையாம்பட்டியைச் சோ்ந்த பிரபு என்பவா் கொண்டு வந்த ரூ. 90 ஆயிரம் என மொத்தம் ரூ. 6 லட்சத்து 55 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான வி.சக்திவேல் வசம் ஒப்படைத்தனா்.
பறிமுதல் பணம் சரிபாா்க்கப்பட்டு ராசிபுரம் சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவா்கள் உரிய ஆவணங்களை வழங்கி தங்களது பணத்தை பெற்றுச் செல்லலாம் என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.