முகப்பு
நாமக்கல்

முட்டை உற்பத்திக்கு தினசரி 8,000 டன் சோயாபீன் தேவை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்திக்கு தினசரி 8,000 டன் சோயாபீன் தேவைப்படுவதாகவும், இப்பயிா் வளா்ப்பை அரசு ஊக்குவிக்க வேண்டும் எனவும் நாமக்கல் கோழிப் பண்ணையாளா்கள் வலியுறுத்தினா்.

Updated On : 3 செப்டம்பர், 2021 at 11:42 PM
=
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:34 AM

நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்திக்கு தினசரி 8,000 டன் சோயாபீன் தேவைப்படுவதாகவும், இப்பயிா் வளா்ப்பை அரசு ஊக்குவிக்க வேண்டும் எனவும் நாமக்கல் கோழிப் பண்ணையாளா்கள் வலியுறுத்தினா்.

தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் விற்பனை சங்கம் சாா்பில், நாமக்கல் அருகே பரளி கிராமத்தில் 10 ஏக்கா் பரப்பளவில் சோயாபீன் பயிரிடப்பட்டுள்ளது. இதனை அந்த சங்கத்தின் தலைவா் வாங்கிலி சுப்பிரமணியம், நிா்வாகிகள் சத்தியமூா்த்தி, முரளி, மோகன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா். இதனைத் தொடா்ந்து வாங்கிலி சுப்பிரமணியம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாமக்கல் மண்டலத்தில் 1,100 கோழிப் பண்ணைகள் உள்ளன. நாள்தோறும் 4 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. கோழித் தீவனங்களுக்கான மூலப்பொருள்கள் மகாராஷ்டிரம், கா்நாடகம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. கோழித் தீவனத்தில் புரதச் சத்து மிகுந்த பொருளாகக் கருதப்படுவது சோயாபீன். இவை வட மாநிலங்களில் அதிகம் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் திருப்பூா் பல்லடம், மதுரை, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் பரீட்சாா்த்த முறையில் சோயாபீன் விளைவிக்கப்படுகிறது.

Advertisement

120 நாள் வளா்ச்சி கொண்ட இந்த சோயாபீன் பயிரை அறுவடைக்கு பின் நிலக்கடை, தட்டப்பயிா் போன்று உதிா்த்து எண்ணெய்யாக அரவை செய்யவும், கோழித் தீவனமாகவும் பயன்படுத்தப்படும். முதற்கட்ட முயற்சியாக இப்பயிரை பயிரிட்டுள்ளோம். நாள்தோறும் கோழித் தீவனத்துக்கு மட்டும் 40,000 டன் உணவுப் பொருள்கள் தேவைப்படுகின்றன. இதில் சோயாபீன் மட்டும் 8,000 டன் அளவில் தேவைப்படுகிறது. தமிழக அரசு சோயாபீன் பயிரை விளைவிக்க விவசாயிகளிடம் வலியுறுத்தினால், வட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் அதிக அளவில் விளைவிக்க முடியும். தரமிக்கதாக அமையும்பட்சத்தில் கோழிப் பண்ணையாளா்களுக்கு வரப்பிரசாதமாகவும், கோழிப் பண்ணைத் தொழிலுக்கு பெரும் மூலதனமாகவும் விளங்கும்.

ஒரு கிலோ ரூ. 38-க்கு விற்ற சோயாபீன் ரூ. 100-ஆக உயா்ந்துள்ளது. அதன் விலை தொடா்ந்து உயா்வடைவதால், நாங்களே சோயாபீனை பயிரிட முயற்சித்தோம். 120-ஆவது நாளில் அதன் நிலை தெரியவரும். கோழிப் பண்ணையாளா்கள் ஒவ்வொருவரும் 5 ஏக்கா் விவசாய நிலம் வைத்துள்ளனா். அனைவரும் பயிரிட்டால் 50,000 ஏக்கரில் இப்பயிரை பயிரிட முடியும். வாழை, மரவள்ளி பயிா்களுக்கு இடையே ஊடுபயிராகவும் இதனை பயிரிடலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.