ராசிபுரம்: ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் காவல் நிலைய முன்னாள் ஆய்வாளருக்கு விவசாயிடம் நிலத்தகராறு தொடர்பாக மிரட்டி பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ராசிபுரம் நீதிமன்றம் இரண்டரை ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2,500 அபராதம் விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.
ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் கொளஞ்சி தோட்டம் பகுதியை சேர்ந்த பழனியப்பன் மகன் வேலு (48) என்பவருக்கும், அவரது பெரியப்பா சாமி கவுண்டர் மகன் செளந்திரராஜன் என்பவருக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு இருந்து வருகிறது.
இது தொடர்பாக செளந்திரராஜன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், வெண்ணந்தூர் காவல் ஆய்வாளராக 2008-ம் ஆண்டு பணியாற்றிய சுப்பிரமணியம் (62), வேலுவை காவல் நிலையம் அழைத்து விசாரித்துள்ளார்.
மேலும் அவர் கொடுத்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொள்ளாமல் வேலுவை மிரட்டி அடித்ததுடன், அவரிடம் இருந்த ரூ.5500 ரொக்கத்தை பிடிங்கி கொண்டாராம். இதனையடுத்து, இது தொடர்பாக வேலு காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம். இதனால் மனம் வெதும்பிய விவசாயி வேலு, ராசிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் ரெகனா பேகம் ஒய்வு பெற்ற காவல் ஆய்வாளர் சுப்பிரமணியத்துக்கு, இரண்டரை ஆண்டு காலம் சிறை தண்டனை மற்றும் ரூ.2500 அபராதம் விதித்து தீர்பளித்தார்.
மேலும் மேல் முறையீடு செய்யும் வகையில் அவருக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டார். காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடையவர் என்பதும், ஒய்வு பெறும் சில நாள்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.