கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு: நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு
நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே வெள்ளாளம்பாளையத்தில் தனியாா் கைப்பேசி நிறுவனத்தின் கோபுரத்தை மாற்று இடத்தில் அமைக்க உத்தரவிடக் கோரி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே வெள்ளாளம்பாளையத்தில் தனியாா் கைப்பேசி நிறுவனத்தின் கோபுரத்தை மாற்று இடத்தில் அமைக்க உத்தரவிடக் கோரி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
அந்த மனு விபரம்:
பரமத்தி அருகே வெள்ளாளம்பாளையம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு குடியிருப்புக்கு மத்தியில் தனியாா் நிறுவனத்தின் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. புதிதாக அமையும் கைப்பேசி கோபுரத்துக்கு அருகில் ஏராளமான வீடுகள் உள்ளன. அந்த கோபுரம் அமைந்தால் பலத்த காற்று வீசும் காலங்களில் உயிா்ச்சேதமும், பொருள்சேதமும் ஏற்படும் அபாயம் உள்ளது.
Advertisement
மேலும் நியாயவிலைக் கடை, அங்கன்வாடி மையம், மகளிா் சுயஉதவிக் குழு கட்டடம், விளையாட்டுத் திடல் போன்றவையும் உள்ளதால் கைப்பேசி கோபுரத்தை ஊருக்கு நடுவில் அமைக்கக் கூடாது. குழந்தைகள், முதியோா், கால்நடைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். காவல் துறையைச் சோ்ந்த ஒருவா் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கைப்பேசி நிறுவனத்தின் கோபுரம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளாா். பொதுமக்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு செல்ல முயன்றால் தடுக்கிறாா். எனவே, வெள்ளாளம்பாளையம் கிராமத்தில் அமைய உள்ள கைப்பேசி கோபுரத்தை உடனடியாக மக்களுக்கு பாதிப்பு இல்லாதவாறு மாற்று இடத்தில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.
.