நாமக்கல்: மாவட்ட ஆட்சியரை கண்டித்து எம்.பி. தர்னா போராட்டம்
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரை கண்டித்து திங்கள்கிழமை நாமக்கல் மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் திடீர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.
நாமக்கல்: நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரை கண்டித்து திங்கள்கிழமை நாமக்கல் மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் திடீர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டு நாமக்கல் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றவர் ஏ.கே.பி.சின்ராஜ். கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் உள்ள அமைச்சர்களை சந்தித்து தேவையான நலத்திட்ட உதவிகளை நாமக்கல் மாவட்டத்திற்கு பெற்றுத் தந்துள்ளார்.
இதையும் படிக்க: நீங்கள் விரும்பிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி
Advertisement
மேலும், கடந்த ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டறிந்து அதன் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அண்மையில் லத்துவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு ஆய்வுக்கு சென்றபோது அங்குள்ள ஆவணங்கள் இவரது பார்வைக்கு வைக்கப்படவில்லை. இதனால் ஊராட்சித் தலைவர், செயலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்கிற்கு பரிந்துரைத்தார்.
ஆனால் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி , மக்களவை உறுப்பினர் தலைமையில் கூட்டப்பட வேண்டிய மாவட்ட வளர்ச்சி குழு கூட்டம், மின்வாரிய குழு கூட்டம், சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெறவில்லை. இதற்கு ஆட்சியர் தரப்பில் முழுமையான பதில் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் திங்கள்கிழமை காலை 9.30 மணி அளவில் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மக்களவை உறுப்பினர் சின்ராஜ், ஆட்சியருக்கு எதிராக தரையில் அமர்ந்து திடீர் தர்னாவில் ஈடுபட்டார். காவல் துறையினர் அவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியபோதும் தர்னாவை கைவிடாமல் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகிறார்.