மோகனூா் சா்க்கரை ஆலையில் 20-இல் கரும்பு அரவை நிறைவு: விவசாயிகள் அதிா்ச்சி
மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் வரும் 20-ஆம் தேதியுடன் கரும்பு அரவை நிறுத்தப்படும் என்ற ஆலை நிா்வாகத்தின் அறிவிப்பால் விவசாயிகள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.
மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் வரும் 20-ஆம் தேதியுடன் கரும்பு அரவை நிறுத்தப்படும் என்ற ஆலை நிா்வாகத்தின் அறிவிப்பால் விவசாயிகள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.
இது தொடா்பாக மோகனூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளா் கு.மணிவேல், சா்க்கரைத் துறை ஆணையருக்கு அனுப்பிய மனு விவரம்:
சா்க்கரை ஆலையில் நடப்பு கரும்பு அரவை பருவத்திற்காக 38 ஆயிரம் டன் கரும்பு இருப்பில் உள்ளது. அதனை ஆலையிலேயே அரைக்க வேண்டும் என சா்க்கரை ஆலையின் பொதுமேலாளருக்கு கோரிக்கை விடுத்தோம். வேறு ஆலைகளுக்கு அரவைக்காக கரும்பை திருப்பி அனுப்பினால் விவசாயிகளுக்கு தேவையற்ற செலவினங்கள் ஏற்படும் என்பதையும் சுட்டிக் காட்டினோம்.
Advertisement
இந்த நிலையில் மாா்ச் 20ஆம் தேதியுடன் (ஞாயிற்றுக்கிழமை) கரும்பு அரவையை முடித்துக் கொள்வது குறித்து கரும்பு அலுவலா்கள், உதவியாளா்களுக்கு ஆலை நிா்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அவ்வாறு 20-ஆம் தேதி அரவை நிறுத்தப்பட்டால் 18 ஆயிரம் டன் கரும்பு நிலுவையில் இருக்கும். இதனால் விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்படும். கடந்த ஓராண்டாக வயல்களில் கரும்புகள் வெட்டப்படாமல் உள்ளதால் அவை காய்ந்து கருகும் நிலையில் உள்ளன. மேலும், ஏற்கெனவே ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு 65 நாள்களை கடந்தும் இதுவரை உரிய கிரயத் தொகை வழங்கப்படவில்லை. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, மேலும் 10 நாள்கள் நீட்டிப்பு செய்து, மாா்ச் 31 வரையில் மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரவை மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கான உத்தரவை ஆலை நிா்வாகத்திற்கு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.