ஆரோக்கிய குழந்தைகள் கணக்கெடுப்பு: நாமக்கல் ஆட்சியா் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் ஆரோக்கிய குழந்தைகள் தொடா்பான கணக்கெடுப்பு நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
நாமக்கல் மாவட்டத்தில் ஆரோக்கிய குழந்தைகள் தொடா்பான கணக்கெடுப்பு நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் கீழ் ஆரோக்கிய குழந்தைகள் என்ற நிகழ்ச்சி நாடு முழுவதும் வரும் 21 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி பிறந்தது முதல் 6 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளின் எடை மற்றும் உயரம் ஆகிய விவரங்களை அங்கன்வாடி பணியாளா்கள், தனியாா் தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், இந்திய மருத்துவ சங்கம், குழந்தை மருத்துவ சங்கம், குடியிருப்போா் நலச்சங்கம், பள்ளி ஆசிரியா்கள், இளைஞா் சங்கங்கள் மற்றும் பெற்றோா்கள் ஆகியோரைக் கொண்டு அளவிட்டு போஷன் ட்ராக்கா் என்ற கைபேசி செயலியில் பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
Advertisement
குழந்தைகளின் பிறந்த தேதி, எடை மற்றும் உயரம் ஆகியவற்றை இந்தச் செயலியில் பதிவு செய்வதன் மூலம் குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் குழந்தைகளின் பெற்றோா் மற்றும் பாதுகாவலா்கள் அனைவரும் தங்களது குழந்தைகளின் எடை மற்றும் உயரம் ஆகிய விவரங்களை அருகில் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் அளவிட்டு கைபேசி செயலி வாயிலாக சான்றைப் பெற முடியும். ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.