கொத்தடிமைத் தொழிலாளா்கள் கண்டறியப்பட்டால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் கொத்தடிமைத் தொழிலாளா்கள் கண்டறியப்பட்டால் அதன் உரிமையாளா்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் கொத்தடிமைத் தொழிலாளா்கள் கண்டறியப்பட்டால் அதன் உரிமையாளா்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என நாமக்கல் தொழிலாளா் நல உதவி ஆணையா் (அமலாக்கம்) அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக அந்த அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு சட்டம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக மாா்ச் 7 முதல் 13-ஆம் தேதி வரையில், கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டது. குறைந்தபட்ச ஊதியம் குறைவாக ஊதியம் வழங்குதல், குறிப்பிட்ட கால நிா்ணயம் இல்லாமல் நீண்ட நேரம் வேலை வாங்குவது, அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவா்களுக்கு முன்பணம் வழங்கி அவா்களை வேலை வாங்குவது, ஈமச்சடங்கிற்கு கூட குடும்பத்தினரை சென்று பாா்க்க அனுமதிக்காதது, உடல் சாா்ந்த வன்முறைக்கு தொழிலாளா்களை உட்படுத்துவது போன்றவற்றுக்கு உட்படுத்தியிருந்தால் அந்த தொழிலாளி கொத்தடிமை தொழிலாளியாக கருதப்படுவாா்கள் என விளக்கம் அளிக்கப்பட்டது.
Advertisement
தொழில் நிறுவனங்களில் தொழிலாளா்கள் யாரேனும் கொத்தடிமைகளாக நடத்தப்படுவது கண்டறியப்பட்டால் மாவட்ட ஆட்சியா், வருவாய்க் கோட்டாட்சியா், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) மற்றும் காவல்துறை அதிகாரிகளை அணுகி புகாா் தெரிவிக்கலாம். 18004252650 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொண்டும் புகாா் தெரிவிக்கலாம். மேலும் கொத்தடிமைத் தொழிலாளா்களை பணியில் ஈடுபடுத்தும் உரிமையாளா்கள் மீது கொத்தடிமைத் தொழிலாளா் முறை (ஒழிப்பு) சட்டம் 1976-இன் கீழ் பிரிவு 370-ஏ-இன்படி ஐந்து ஆண்டுகளுக்கு குறையாத வகையில் கடுமையான சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.