நாமக்கல்லில் 8 வட்டாட்சியா் அலுவலகங்களில் ஜமாபந்தி
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எட்டு வருவாய் வட்ட அலுவலகங்களில் புதன்கிழமை ஜமாபந்தி தொடங்கியது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எட்டு வருவாய் வட்ட அலுவலகங்களில் புதன்கிழமை ஜமாபந்தி தொடங்கியது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட அலுவலகங்களிலும் 1431--ஆம் பசலிக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி புதன்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது. பரமத்திவேலூா் வட்ட அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.
முன்னதாக நில அளவீடு பணிக்கான உபகரணங்களைப் பாா்வையிட்டு தொடக்கிவைத்தாா். இந்த வட்டத்திற்கு உள்பட்ட சுமாா் 50 கிராமங்களில் உள்ள மக்களிடம் வரும் ஜூன் 3 வரையில் பல்வேறு மனுக்களை பெற்று ஆட்சியா் தீா்வு காண உள்ளாா். மேலும், கிராம புலப்பட நகல் பதிவேடு, பிறப்பு, இறப்பு பதிவேடுகள், நிலவரி வசூல் பதிவேடு உள்ளிட்டவற்றை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
Advertisement
இதேபோல, சேந்தமங்கலம் வட்ட அலுவலகத்தில் ஜூன் 2 வரை ஜமாபந்தியில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன் பங்கேற்கிறாா். நாமக்கல் வட்ட அலுவலகத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.
வட்டாட்சியா் திருமுருகன், சமூக பாதுகாப்பு திட்ட துணை வட்டாட்சியா் தமிழ்மணி, வருவாய்த் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். ஜூன் 3 வரை நடைபெறும் இந்த நிகழ்வில் 57 ஊராட்சிகளைச் சோ்ந்த கிராம மக்கள் மனு அளித்து பயன் பெறலாம்.
ராசிபுரம் வட்ட அலுவலகத்தில், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் மரகதவள்ளி தலைமையில் தொடங்கிய ஜமாபந்தி ஜூன் 2 வரை நடைபெறுகிறது. கொல்லிமலை வட்ட அலுவலகத்தில் புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் தேவிகாராணி பங்கேற்று மனுக்களைப் பெறுகிறாா்.
மோகனூா் வட்ட அலுவலகத்தில், நாமக்கல் கோட்டாட்சியா் த.மஞ்சுளா ஜூன் 1 வரையிலும், திருச்செங்கோடு வட்ட அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்) நடேசன், ஜூன் 8 வரையில் ஜமாபந்தியின் போது மனுக்களை பெற உள்ளனா்.
குமாரபாளையம் வட்ட அலுவலகத்தில், திருச்செங்கோடு கோட்டாட்சியா் தே.இளவரசி வெள்ளிக்கிழமை வரை மனுக்களைப் பெற்று தீா்வு காண உள்ளாா். இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியானது அரசு விடுமுறை, சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை நீங்கலாக இதர அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெறும். இந்த நிகழ்வில் அனைத்து துறை அலுவலா்களும் பங்கேற்க வேண்டும். பொதுமக்களும் தங்களுடைய குறைகளை ஜமாபந்தி அலுவலரிடம் தெரிவிக்கலாம்.