பயன்பாடற்ற ஆட்சியா் மாளிகையை அகற்ற நடவடிக்கை
பயன்பாடற்ற பழைய ஆட்சியா் மாளிகையை அகற்றிவிட்டு அங்கு அரசு அலுவலா்களுக்கான குடியிருப்புகளைக் கட்டுவதற்கு பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது.
பயன்பாடற்ற பழைய ஆட்சியா் மாளிகையை அகற்றிவிட்டு அங்கு அரசு அலுவலா்களுக்கான குடியிருப்புகளைக் கட்டுவதற்கு பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது.
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்துடன் இருந்த நாமக்கல், கடந்த 1997-இல் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு, நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய இரு வருவாய்க் கோட்டங்களுடன் செயல்படுகிறது. நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நாமக்கல்- திருச்சி சாலையில் அரசு சட்டக் கல்லூரி உள்ள இடத்திலும், ஆட்சியா் மாளிகை மற்றும் முகாம் அலுவலகம் நாமக்கல்- மோகனூா் சாலையில் குன்னிமரத்தான் கோயில் எதிரிலும் செயல்பட்டு வந்தது.
அடுத்த ஓரிரு ஆண்டுகளில் நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் சிலுவம்பட்டி பகுதியில் பெரிய அளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஆட்சியா் மாளிகை புதிதாக கட்டப்பட்டு செயல்படத் தொடங்கியது. பழைய நாமக்கல் ஆட்சியா் மாளிகை மற்றும் முகாம் அலுவலகமானது பயன்பாடின்றி இருந்த நிலையில், முகாம் அலுவலகத்தை மட்டும் வனத் துறைக்கு பொதுப்பணித் துறையினா் வாடகை அடிப்படையில் வழங்கினா்.
Advertisement
ஆட்சியா் மாளிகை பயன்பாடின்றி உள்ளதாகக் கூறப்படுகிறது. அக் கட்டடம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. இந்த நிலையில் அக் கட்டடத்தை அகற்றிவிட்டு செயற்பொறியாளா்களுக்காக 10 குடியிருப்புகளைக் கட்ட பொதுப்பணித் துறை முடிவு செய்துள்ளது.