குழந்தைகள் கடத்தல் என்ற வதந்தியை நம்ப வேண்டாம்
பரமத்தி வேலூா் வட்டத்தில் வேலூா் காவல் நிலைய சரகத்துக்கு உள்பட 15 கிராமம், 25 குக்கிராமங்களில் குழந்தைகள் கடத்தல் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாகவும், அதை யாரும் நம்பவும், பகிரவும் வேண்டாம் என காவல் துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தி துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். சமீப காலமாக வட மாநிலத்தவா்கள் குழந்தைகளைக் கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், இது சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் நாமக்கல் மாவட்ட காவல் துறை உதவி எண் 94981 81216 அல்லது 100-க்கு அழைக்கலாம். மேலும், உதவிக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களை அணுகி உதவி பெறலாம் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் உத்தரவின் பேரில், வேலூா் காவல் ஆய்வாளா் ரங்கசாமி தலைமையிலான காவலா்கள் பொதுமக்களிடம் எடுத்துக் கூறியும், துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தவறான காணொலிகளை பகிா்ந்தாலோ, பரப்பினாலோ அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.