முகப்பு
மதுரை

பழனியில் யானைகளால் சேதமுறும் பயிர்கள்

பழனி, செப். 30:   பழனியை அடுத்த கொடைக்கானல் மலை அடிவாரத்தில் காட்டு யானைகளால் தினமும் பல நூறு ஏக்கர் விளைபயிர்கள் சேதமடைந்து வருகின்றன. வனத் துறையினரின் இயலாமையால் விவசாயிகளும் புகார் செய்வதையே மறந்து

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:47 PM
பகிர்:

பழனி, செப். 30:   பழனியை அடுத்த கொடைக்கானல் மலை அடிவாரத்தில் காட்டு யானைகளால் தினமும் பல நூறு ஏக்கர் விளைபயிர்கள் சேதமடைந்து வருகின்றன. வனத் துறையினரின் இயலாமையால் விவசாயிகளும் புகார் செய்வதையே மறந்துவிட்டனர்.

  பழனியில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் கொடைக்கானல் மலைத் தொடர் ஆரம்பமாகிறது. இதன் அடிவாரத்தில் புளியமரத்துசெட், தேக்கன்தோட்டம், அண்ணாநகர், சட்டப்பாறை, ஆண்டிபட்டி உள்ளிட்ட ஏராளமான விவசாய கிராமங்கள் உள்ளன.

  இங்கு பல ஆயிரம் ஏக்கர்களில் நெல், கரும்பு, வாழை, சோளம், தென்னை, கொய்யா மற்றும் மாந்தோப்புகள் உள்ளன.

  சில ஆண்டுகளுக்கு முன்பு, இங்குள்ள விளை நிலப் பகுதிகளுக்குள் தண்ணீருக்காகப் புகுந்த காட்டு யானைகளுக்கு உண்பதற்கு சுவையான பயிர் வகைகள் கிடைத்தவுடன், இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டன. இதனால், விளை பயிர்கள் நாசமாகி கோடிக்கணக்கான ரூபாய்க்கு விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.

  மேலும், இங்குள்ள விவசாயிகளுக்கும், யானைகளுக்கும் இடையே எப்போதும் தொடர் போராட்டம்தான்.

  இதற்காக, விவசாயிகள் பலமுறை சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஒரு கட்டத்தில் வனத் துறையினருக்குப் பிரச்னை ஏற்பட்டது. ஆகையால், குறைந்த அளவு நிவாரணங்களை வழங்கியும், சிறிதளவு பகுதிக்கு மட்டும் மின்சார வேலி அமைத்துக் கொடுத்தும் விவசாயிகளை சமாதானம் செய்ய முயன்றனர் வனத் துறையினர்.

  தொடர்ந்து, இங்கு தங்கியுள்ள காட்டு யானைகளை விரட்டுவதற்கு, பல ஆயிரம் ரூபாய் செலவழித்து கும்கி யானைகளும் கொண்டு வரப்பட்டன. இருப்பினும், வனத் துறையினர் விஷயத்தில் விநாயகப் பெருமான் கருணை காட்டுவதாக இல்லை.

  அதெப்படி, சகல சௌகரியங்களையும் அனுபவித்து வரும் காட்டு யானைகளை திடீரென அங்கிருந்து அகற்ற முயன்றால் முடியுமா? ஒரு யானைகூட அசைந்து கொடுக்கவில்லை.

  அப்பா, இது நம்மனால ஆகாதப்பா என, கும்கி யானைகளும் வந்த வழியே திரும்பிச் சென்றுவிட்டன.

  கடைசியாக, வனத் துறையினர் விவசாயிகளுக்கு சிறப்பான யோசனை கூறுகிறேன் என "எஸ்கேப்' ஆகிவிட்டனர். அதாவது, மலை அடிவாரத்தில் யானைகளுக்கு பிரியமானவற்றை பயிர் செய்ய வேண்டாம் என்பதுதான் அது. அதையும் மீறிப் பயிர் செய்தால், மின்சார வேலி போட்டுக் கொள்ளுங்கள் என்பது கூடுதல் யோசனை.

  எனவே, காட்டு யானைகளை விரட்ட வனத் துறையினர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

  பயிர் இழப்பீடு கோரி செல்லும் விவசாயிகளோ, தாலுகா அலுவலகம், விவசாய அலுவலகம், சிட்டா, அடங்கல் என சுற்ற முடியாமலும், செலவு செய்ய முடியாமலும் அடங்கிப் போய் விட்டனர்.

  முடிந்தவர்கள் மின்சார வேலி போட, முடியாதவர்களோ விவசாயத்தில் யானைக்கும் ஒரு பங்கு என பிரித்து விவசாயம் செய்து வருகின்றனர்.

  கடந்த சில வாரங்களாக மின்சார வேலிகளையும் நம்பிக்கையுடன் தனது தும்பிக்கையால் மரக்கிளைகளைக் கொண்டு பதம் பார்க்க ஆரம்பித்துவிட்டனவாம் காட்டு யானைகள்.

  தற்போது, விளை பயிர்களின் சேத அளவு கூடிக் கொண்டே போவதால், எங்கே செல்வது? யாரிடம் முறையிடுவது? எனத் தெரியாமல் விழி பிதுங்கி போயுள்ளனர் விவசாயிகள்.

  இப் பகுதி விவசாயிகளின் சோதனை நீங்க அரசு ஏதாவது வழி பண்ணுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.