திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோவில் சுற்றுலாத் தலமாக்கப்படுமா?
சிவகங்கை, ஏப். 17: சிவகங்கை மாவட்டம், திருமலையில் உள்ள மலைக்கொழுந்தீஸ்வரர் கோவிலை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை நகரிலிருந்து சுமார் 21 கி.மீ. தொல
சிவகங்கை, ஏப். 17: சிவகங்கை மாவட்டம், திருமலையில் உள்ள மலைக்கொழுந்தீஸ்வரர் கோவிலை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை நகரிலிருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் திருமலை அமைந்துள்ளது. இங்கு மூலவர் அருள்மிகு மலைக்கொழுந்தீஸ்வரர், அருள்மிகு பாகம்பிரியாளுடன் அருள்பாலிக்கிறார்.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள்பாலிக்கும் பல்லவர் கால குடைவரைக் கோவில் இங்கு உள்ளது. முதன்முதலில் அந்த குடைவரை கோவில்தான் இருந்தது. பின்னர் இக்கோவில் விரிவுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. 8-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் இந்தக் கோவிலை விரிவுபடுத்தியுள்ளனர்.
சிவகங்கை சமஸ்தானத்துக்கு உள்பட்ட கோவில்களில் இதுவும் ஒன்று. இங்கு விநாயகர், சிவன், அம்மன், தண்டபாணி, தட்சிணாமூர்த்தி, முக்குருணி விநாயகர், சப்தமாதா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், பைரவர், நந்தி, சூரியன், சந்திரன், பைரவர், சுப்பிரமணியர், நவக்கிரகங்கள் ஆகியோரின் விக்ரகங்களும் உள்ளன.
பைரவர் கதை என்ற ஆயுதத்தை கையில் ஏந்தியபடி இங்கு அருள்பாலிக்கிறார். இதுபோன்று வேறு எங்கும் இல்லை என்று கூறப்படுகிறது. சனீஸ்வரர் காகத்தின் மீது ஒற்றைக் காலை மேலே வைத்து அமர்ந்திருப்பது மற்றொரு சிறப்பாகும்.
சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். முருகர் வள்ளி, தெய்வானை சிலைகள் மட்டுமின்றி 6 முகத்துடன் கூடிய சண்முகர் சிலையும் இங்கு உள்ளது.
கல்வெட்டுகள்: இக்கோவில் பண்டைய காலத்தில் புகழ்பெற்று விளங்கியதற்கு பல்வேறு சாட்சியங்கள் கிடைத்துள்ளன. ஆனால், ஸ்தல வரலாறு என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை.
இங்கு பல்வேறு இடங்களில் கல்வெட்டுகள் உள்ளன. அவற்றை தொல்லியல் துறையினர் பிரதி எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் இதுவரை இதுகுறித்த எந்த விவரங்களும் கிடைக்கவில்லை.
இந்த கற்கள் வேறு எங்கிருந்தோ பெயர்த்து எடுத்து வந்து கட்டப்பட்டது போன்று தெரிகிறது. கல்வெட்டுகளில் உள்ள வாசகங்கள் தொடர்பு இல்லாதவையாக உள்ளன என தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் கூட குடைவரை கோவிலை தொல்லியல் துறையினர் அளவெடுத்து ஆராய்ந்து சென்றுள்ளனர் என்று இப்பகுதி மக்கள் கூறினர்.
மூலிகை ஓவியங்கள்: பெரிய பாறைகளின் மீது அமைந்துள்ள இக்கோவிலில் பண்டைய காலத்தில் மூலிகைகளால் வரையப்பட்ட பல கோட்டோவியங்கள் உள்ளன. இரு ஆடவர்கள் சண்டையில் ஈடுபட்டுள்ளது போலவும், பறவைகள் போல வேடமணிந்த மனிதர்கள் போலவும், முக்கோண வடிவங்களால் உருவாக்கப்பட்ட மனிதன் கையில் தமறு என்று இசை வாத்தியத்தை வாசிப்பது போலவும், ஒரு மனிதன் கையில் கம்புடன் குதிரையை ஓட்டுவது போலவும், கொக்கு, நாய், மான் ஆகிய உருவங்களும் வரையப்பட்டுள்ளன.
அண்மையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியில் இந்த ஓவியங்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.
இவை கி.மு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
அவை ஆராய்ச்சிக்கு உரியவையாக உள்ளன. அழிவின் விளிம்பில் இருக்கும் இவற்றை அரசு காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் விருப்பம்.
சமணர் படுக்கைகள்: சமணர்களின் படுக்கை போன்ற 8 அமைப்புகள் இங்கு உள்ளன. அதன் அருகில் ஸ்வஸ்திக் வடிவம் கருங்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.
வனவாசத்தின்போது ராமரும், சீதையும் ஒரு நாழிகை இங்கு தங்கிச் சென்றதாகக்
கூறப்படுகிறது. இவை அனைத்தும் பழம் பெருமை தெரியாத சிலரால் பாழ்படுத்தப்பட்டு அழிவின் விளம்பில் உள்ளன.
எனவே, இக்கோவிலின் தொன்மையைக் காக்க இதைப் பாதுகாத்து. இந்தக் கோவிலை சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் விருப்பம் தெரிவித்தனர்.