சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு
சிவகங்கை, ஏப். 21:சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் போதிய அளவில் குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள
சிவகங்கை, ஏப். 21:சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் போதிய அளவில் குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், கல்வித் துறை அலுவலகம், கருவூலம், வேளாண்மைத் துறை அலுவலகம், மின்வாரிய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன.
இதில் ஆட்சியர் அலுவலகத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். வாரம்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் ஆகியவற்றின்போது பொதுமக்களின் வருகை இருமடங்கு அதிகமாக இருக்கும்.
இது தவிர, தேர்தல் பயிற்சி உள்ளிட்ட பணிகளுக்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து வரும் அலுவலர்கள், பணியாளர்களும் அதிகளவில் வந்து செல்கின்றனர். ஆனால் இவர்களுக்கான குடிநீர் வசதி போதுமானதாக இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் தரை மற்றும் முதல் தளத்தில் இரு கூட்ட அரங்குகள் உள்ளன. மேலும், அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஏராளமான சிறுவர்களும், இளைஞர்களும் விளையாடுவர். இவர்களின் வசதிக்காக, இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர்த் தொட்டி கடந்த சில மாதங்களாக பயன்பாடின்றி உள்ளது.
அதேபோல, முதல் தளத்தில் கூட்ட அரங்கம் அருகே உள்ள குடிநீர் சுத்திகரிக்கும் கருவியும் பழுதடைந்துள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன் உள்ள குடிநீர்த் தொட்டியிலும் நீண்ட நாள்களாகத் தண்ணீர் விநியோகம் இல்லை.
இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர், தங்கள் சொந்த செலவில் தண்ணீர் கேன்களை வாங்கி வைத்துள்ளனர். சிலர் வீட்டிலிருந்தே குடிநீரைக் கொண்டு வந்து விடுகின்றனர்.
ஆனால், ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் கோடை காலத்தில் போதிய குடிநீர்க் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். பலரும் கடைகளில் தண்ணீர் பாட்டில்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை நகராட்சி ஆணையர் சுந்தரமூர்த்தி கூறியதாவது: ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள குடிநீர்த் தொட்டி நகராட்சி மூலம் வைக்கப்பட்டது. ஆனால் தண்ணீர் வசதி ஏற்படுத்தியது, பராமரிப்பு ஆகியவை பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது என்றார்.
பொதுப்பணித்துறை நகர்ப்பகுதி உதவிப் பொறியாளர் வைத்திலிங்கத்திடம் கேட்டபோது, விளையாட்டு மைதானத் தொட்டியில் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இப்போது தண்ணீர் வராதது குறித்து தெரியவில்லை. இருப்பினும் தண்ணீர் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சோமசேகர் கூறுகையில், பழுதடைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளிட்டவை குறித்து விரைவில் சிரஸ்தார் உள்ளிட்டோரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.