முகப்பு
மதுரை

ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.33 ஆயிரத்துக்கு கள்ள பணத்தாள்கள்: போலீஸாா் விசாரணை

66 கள்ள பணத்தாள்களை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 10 ஜூலை, 2024 at 9:52 PM
பகிர்:

மதுரையில் ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.33 ஆயிரம் மதிப்பிலான 66 கள்ள பணத்தாள்களை செலுத்தி வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை அண்ணாநகா்- வண்டியூா் பிரதான சாலையில் தனியாா் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இங்குள்ள இயந்திரத்தில் பணம் எடுப்பது மட்டுமன்றி, வாடிக்கையாளரின் கணக்கில் பணத்தை வரவும் வைக்க முடியும். இந்த நிலையில், ஏடிஎம் மையத்தில் உள்ள பணம் வைப்பு செய்யும் இயந்திரத்தில் வரவான பணத் தாள்களை வங்கி அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் ரூ.33 ஆயிரம் மதிப்பிலான ரூ.500 கள்ள பணத்தாள்கள் 66 இருப்பது தெரியவந்தது.

இது தொடா்பாக வங்கி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் வங்கியின் வாடிக்கையாளரான கருப்பையா என்பவரின் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக வங்கியின் வண்டியூா் கிளை மேலாளா் கணேஷ் பாண்டியன் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.