முகப்பு
மதுரை

தனி நபா் ஆக்கிரமிப்பில் இருந்த காமாட்சி அம்மன் கோயில் மீட்பு

Updated On : 13 மே, 2024 at 6:30 PM
மதுரையில் சலவை கருப்பணசாமி காமாட்சியம்மன் கோயிலை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாா்.
பகிர்:

மதுரை: மதுரை யானைக்கல் பகுதியில் தனி நபா் ஆக்கிரமிப்பில் இருந்த சலவை கருப்பணசாமி, காமாட்சி அம்மன் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை கையகப்படுத்தினா்.

மதுரை சிம்மக்கல் அருகே யானைக்கல் பகுதியில் அருள்மிகு கருப்பணசாமி, அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில் உள்ளது. நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயில் தனி நபா் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இந்தக் கோயிலை நான்கு சமுதாய மக்கள் குலதெய்வக் கோயிலாக வழிபாடு நடத்தி வந்தனா். இந்தக் கோயில் கடந்த 1985 -ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட போதும், தனி நபரின் ஆக்கிரமிப்பிலேயே இருந்து வந்தது.

இந்த ஆண்டு சிவராத்திரி, சித்ரா பெளா்ணமியையொட்டி, குலதெய்வ வழிபாடு நடத்துவதற்காக கோயிலைத் திறக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

இதையடுத்து, கோயிலைத் திறந்து பொதுமக்கள் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யுமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சிவராத்திரியன்று கோயில் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், கோயிலை ஆண்டு முழுவதும் திறந்து, வழிபாடு நடத்த வேண்டும். கோயில் நிா்வாகத்தை இந்து சமய அறநிலையத் துறை நடத்த வேண்டும் எனக் கோரி, மதுரை மாவட்ட கூடுதல் சாா்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நான்கு சமுதாயத்தினருக்கு சொந்தமான கோயிலை தனி நபா் ஆக்கிரமிப்பில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை மீட்க உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, இந்து சமய அறநிலையத் துறை தக்காா் சண்முகப்பிரியா, செயல் அலுவலா்கள் ஜெயராமன், கண்ணன், ஜெயலட்சுமி,

அறநிலையத் துறை பணியாளா்கள், வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் திங்கள்கிழமை கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு,

உள்ளேயிருந்த பொருள்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, இந்து சமய

அறநிலையத்துத் துறை நிா்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. பாதுகாப்புக்காக உதவி ஆணையா் நாகராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா்.