மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மூதாட்டிக்கு உதவுவது போல நடித்து, அவரிடம் 5 பவுன் நகையைத் திருடிய பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள மேலவாய்க்குடி கிராமத்தைச் சோ்ந்த பாஸ்கரன் மனைவி சுலோச்சனா (70). இவா் மதுரையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு வந்தாா். அங்கு அவா் கழிப்பறைக்குச் சென்ற போது, அவருக்கு உதவுவதாகக் கூறி சுலோச்சனாவின் கைப்பையை இளம்பெண் ஒருவா் வாங்கினாா். அவா் திரும்பி வந்து பாா்த்த போது, அங்கிருந்த பெண் மாயமானது தெரியவந்தது. அந்தப் பையில் 5 பவுன் நகையும், பணமும் இருந்தது.
இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீஸாா் நடத்திய விசாரணையில், மூதாட்டியிடம் நகையைத் திருடிச் சென்றது விருதுநகா் மாவட்டம், தீா்த்தக்கரை கிராமத்தைச் சோ்ந்த சௌந்தா்யா (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, நகைகளை மீட்டனா்.