அவசர ஊா்தி மோதியதில் கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம்(60). கட்டடத் தொழிலாளியான இவா், புதன்கிழமை காலை வேலைக்காக தனது இரு சக்கர வாகனத்தில் மதுரைக்கு வந்தாா்.
அப்போது வண்டியூா் அருகே உள்ள சுற்றுச்சாலையில் அந்த வழியாக வந்த அவசர ஊா்தி இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சுந்தரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதனிடையே விபத்துக்குள்ளான அவசர ஊா்தி மீது மோதாமல் இருக்க, அதன் பின்னால் வந்த அரசுப் பேருந்தை ஓட்டுநா், சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கினாா். ஓட்டுநரின் இந்த செயலால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் எந்தவித காயமுமின்றி தப்பினா்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த அண்ணாநகா் போலீஸாா் சுந்தரத்தின் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.