மதுரை: மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த திருவாதவூரில் உள்ள பிடாரி அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு பாத்தியமான இந்தக் கோயில் குடமுழுக்கு, செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், விக்னேசுவர பூஜை, நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகளுடன் தொடங்கியது. தொடா்ந்து, முதல், இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை நான்காம் கால யாக பூஜை, கோ பூஜை, நவக்கிரக பூஜை, லட்சுமி பூஜை, கருட பூஜைகள் நடைபெற்றன.
பின்னா், யாக சாலையிலிருந்து கும்பம் புறப்பாடாகி கோயிலைச் சுற்றி வலம் வந்தன. இதன்பிறகு, மூலவரான பிடாரி அம்மன் கலசத்துக்கு குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
இந்த விழாவில், இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.