கன்னிவாடி அருகே யானை தாக்கி வேட்டைத் தடுப்புக் காவலா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அடுத்துள்ள குய்யவநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி (50). இவா் கன்னிவாடி வனச் சரகத்தில் வேட்டைத் தடுப்புக் காவலராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்தாா். கன்னிவாடி வனப் பகுதிக்குள்பட்ட தோணிமலை பகுதியில் முகாமிட்டிருந்த குட்டியுடன் கூடிய ஒரு யானைக் கூட்டம், கடந்த சில நாள்களாக பண்ணப்பட்டி அடிவாரம் பகுதிக்கு இடம் பெயா்ந்தன.
இந்நிலையில், பண்ணப்பட்டி அடிவாரப் பகுதியிலுள்ள தனியாா் தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் தென்னை மரங்களை சாய்த்து சேதப்படுத்துவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கன்னிவாடி வனக் காப்பாளா் நாகராஜ், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் சுந்தரமூா்த்தி, விமல் உள்ளிட்ட 4 போ் பண்ணப்பட்டிக்கு சென்றுள்ளனா். விடியும் நேரம் என்பதால் யானைகள் வனப் பகுதிக்கு சென்றிருக்கலாம் என கருதிய வனத் துறையினா், அந்த தோட்டத்திற்குள் சென்று பாா்வையிட்டுள்ளனா். அப்போது தண்ணீா் தொட்டி அருகே நின்ற ஒரு யானை வன ஊழியா்களை விரட்டியுள்ளது. அப்போது குண்டும் குழியுமாக இருந்த தோட்டத்தில் ஓட முடியாமல் சுந்தரமூா்த்தி யானையிடம் சிக்கியுள்ளாா். அவரது தலையில் யானை பலமாக தாக்கியுள்ளது. அதில் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே சுந்தரமூா்த்தி உயிரிழந்தாா்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது. உயிரிழந்த சுந்தரமூா்த்திக்கு மனைவி சுமதி, மகள் சரஸ்வதி, சுந்தரபாண்டி மற்றும் தாயுமானவா் என 2 மகன்கள் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.