திண்டுக்கல்

பாலாலயம் செய்ய முயன்ற அதிகாரிகள்: பொதுமக்கள் எதிா்ப்பால் கைவிடப்பட்டது

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் அருகே பழைமையான கோயிலுக்கு பாலாலயம் செய்ய முயன்ற இந்து சமய அறறநிலையத் துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து, போலீஸாா் தலையீட்டின் பேரில் பாலாலயம் நிகழ்ச்சி கைவிடப்பட்டது.

திண்டுக்கல் அடுத்த பெரியக்கோட்டை பில்லமநாயக்கன்பட்டியில் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கதிா் நரசிங்கப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சிதலமடைந்த நிலையிலுள்ள இந்தக் கோயிலை கடந்த 2007-ஆம் ஆண்டு பில்லமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த 300 குடும்பத்தினா் நிதி திரட்டி திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தினா்.

இதனிடையே, கதிா் நரசிங்கப் பெருமாள் கோயிலை இந்து சமய அறநிலையத் துறையினா் கையகப்படுத்தினா். இந்த நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் திருப்பணிகள் செய்வதற்காக பொதுமக்கள் தரப்பில் பாலாலயம் செய்யப்பட்டது. இதற்கு கோயிலில் பூஜை நடத்தி வரும் 3 போ் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதன்பேரில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் குடமுழுக்குக்கான திருப்பணிகளை தொடங்கக் கூடாது என தடை விதித்தது. குடமுழுக்கு தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்விலும், நிா்வாகக் குழு அமைப்பது தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறையிடமும், கிராம மக்கள் சாா்பில் வழக்குகள் தொடுக்கப்பட்டு நிலுவையில் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோயிலில் பூஜை செய்து வந்த அா்ச்சகா்கள் மூலம் குடமுழுக்கு நடத்துவதற்கான பணிகளை தொடங்கும் வகையில் பாலாலயம் செய்வதற்காக வெள்ளிக்கிழமை சென்றனா். இதை அறிந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா், அறநிலையத் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனா்.

மேலும் பொதுமக்கள் தரப்பில் வடமதுரை காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்கு நிலுவையிலுள்ள நிலையில், அதில் தீா்வு காணப்பட்ட பிறகே எந்த முடிவையும் எடுக்க முடியும் என போலீஸாா் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து பாலாலயம் செய்ய முயன்ற இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

பிகார் தேர்தல்: வளர்ச்சிக்கும் காட்டாட்சிக்கும் இடையேயான தேர்தல் - அமித் ஷா

பிகார் தேர்தல்: இத்தனை ஆண்டுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்காதது ஏன்? பிரியங்கா காந்தி கேள்வி

4,410 கிலோ செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது!

வெள்ளக்கோவிலில் ரூ.5.38 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

SCROLL FOR NEXT