பலமுறை விண்ணப்பித்தும் உதவித்தொகை கிடைக்கவில்லை: ஆட்சியரிடம் முதியவர்கள் புகார்
பல முறை விண்ணப்பித்தும் உதவித்தொகை கிடைக்கவில்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் முதியோர்கள் செவ்வாய்க்கிழமை புகார் தெரிவித்தனர்.
பல முறை விண்ணப்பித்தும் உதவித்தொகை கிடைக்கவில்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் முதியோர்கள் செவ்வாய்க்கிழமை புகார் தெரிவித்தனர்.
மேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். நரசிங்கம்பட்டி ஊராட்சி பூசாரிப்பட்டியில் கட்டப்படும் பசுமை வீடுகள், தனிநபர் இல்லக் கழிப்பறைகளை ஆட்சியர் பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த கிராமத்தினரிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அதில், முதியோர் சிலர், தாங்கள் பல முறை விண்ணப்பித்தும் முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை என புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கிருந்த முதியவர்கள் 4 பேருக்கு உதவித்தொகை வழங்கவும், மேலும் 4 பேருக்கு குடும்ப அட்டைகளை வழங்கவும் அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, தாய் திட்டத்தில் ரூ.28.17 லட்சத்தில் முடிக்கப்பட்ட தார்ச்சாலை பணி, ரூ.2.7 லட்சத்தில் கட்டப்பட்ட கிராம சேவை மையக் கட்டடம் ஆகியவற்றையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். பின்னர், மேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இதில், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராஜ், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் லட்சுமி, மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரத்தினகலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.