அரசுப் பேருந்து நடத்துநர் மீது தாக்குதல்: இளைஞர் கைது
மதுரையில் அரசுப் பேருந்து நடத்துனரைத் தாக்கிய இளைஞரை, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மதுரையில் அரசுப் பேருந்து நடத்துனரைத் தாக்கிய இளைஞரை, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்தவர் சக்தி செல்வம் (42), அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், சனிக்கிழமை ராமநாதபுரத்திலிருந்து மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்துக்கு பேருந்தை ஓட்டி வந்துள்ளார். அப்போது, பேருந்தின் நடத்துனராக கணேசன் பணியிலிருந்துள்ளார். விரகனூர் வைகையாற்றுப் பாலம் அருகே பேருந்து வந்துகொண்டிருந்த போது, அவ்வழியாகச் சென்ற இரு சக்கர வாகனத்தை முந்திச் சென்றுள்ளனர். இதனால், இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரும், பேருந்தை வழிமறித்து நடத்துனர் கணேசனை தாக்கிவிட்டுச் சென்றனராம்.
இது குறித்து ஓட்டுநர் சக்திசெல்வம் அளித்த புகாரின்பேரில், அண்ணா நகர் போலீஸார் வழக்குப் பதிந்து, பனையூரைச் சேர்ந்த மணிகண்டன் (24) என்பவரைக் கைது செய்தனர்.