முகப்பு
மதுரை

மதுரை ரயில் நிலையத்தில் நாய்கள் தொல்லை: பயணிகள் புகார்

மதுரை ரயில் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் திரியும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Updated On : 22 அக்டோபர், 2018 at 8:39 AM
பகிர்:

மதுரை ரயில் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் திரியும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 மதுரை ரயில் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் ஓய்வெடுக்கும் வகையில் முதலாம் நடைமேடையின் இடது, வலது புறத்தில் தலா இரு காத்திருப்பு அறைகள் உள்ளன. ஆனால், இப்பகுதி முழுவதும் தெரு நாய்களின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், கடந்த வாரத்தில் இரண்டாம் நடைமேடை அருகே ரயில் தண்டவாளத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரை அங்கிருந்த நாய் ஒன்று கடித்துள்ளது. இதனால் காயமடைந்த அவருக்கு ரயில்வே மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.  
 இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது,  பயணிகள்  மீதமான உணவுகளை நடைமேடைகளில் உள்ள குப்பைத் தொட்டிகளில் கொட்டாமல் நடைமேடை ஓரங்களிலும், தண்டவாளத்தின் மீதும் கொட்டுகின்றனர். இதை உண்பதற்காக ரயில் நிலைய வளாகத்தின் அருகே சுற்றித்திரியும் நாய்கள் வருகின்றன. இவற்றைப் பிடித்துச் செல்லுமாறு செப்டம்பர் மாதம் மாநகராட்சிக்கு கடிதம் எழுதியும்  நடவடிக்கை எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த வாரத்தில் மாநகராட்சி அதிகாரிகளுக்கு  மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பயணிகளும் சற்று பொறுப்புணர்வோடு நடந்துகொள்வது அவசியம். விரைவில் இப்பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.