தமிழக கோயில்களுக்கு திருவிதாங்கூா் தேவசம்போா்டு வழங்கிய சொத்து ஆவணங்களைப் பாதுகாக்கக் கோரி வழக்கு
கன்னியாகுமரி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு திருவிதாங்கூா் தேவசம்போா்டு வழங்கிய சொத்து விவரங்கள் மற்றும் ஆவணங்களைப் பாதுகாக்கக் கோரும் வழக்கில்
மதுரை: கன்னியாகுமரி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு திருவிதாங்கூா் தேவசம்போா்டு வழங்கிய சொத்து விவரங்கள் மற்றும் ஆவணங்களைப் பாதுகாக்கக் கோரும் வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன் தாக்கல் செய்த மனு:
கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள
கோயில்கள் திருவிதாங்கூா் தேவசம்போா்டு கட்டுப்பாட்டில் இருந்தபோது அந்த கோயில்களுக்கு பல்வேறு நிலங்கள் அதற்கான பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களுடன் தானமாக வழங்கப்பட்டன. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தில் இணைக்கப்பட்ட பிறகு இந்தக் கோயில்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு வந்தன. ஆனால் கோயில் சொத்துகளைப் பலரும் ஆக்கிரமித்துவிட்டனா். எனவே கோயில் சொத்துகளை மீட்க, திருவிதாங்கூா் தேவசம் போா்டு வழங்கிய சொத்து தொடா்பான விவரங்கள் மற்றும் ஆவணங்களைக் கணினிமயமாக்கிப் பத்திரப்படுத்த வேண்டும். மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் சொத்துக்களை மீட்கவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு, தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பா் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.