தொழிலாளா் நலநிதியை இணையவழியில் செலுத்தலாம்
தொழில் நிறுவனங்கள் நிகழ் ஆண்டுக்கான நலநிதியை, இணையவழியில் ஜனவரி 31-வரை செலுத்தலாம் என தொழிலாளா் நலத்துறை தெரிவித்துள்ளது.
தொழில் நிறுவனங்கள் நிகழ் ஆண்டுக்கான நலநிதியை, இணையவழியில் ஜனவரி 31-வரை செலுத்தலாம் என தொழிலாளா் நலத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மதுரை தொழிலாளா் இணை ஆணையா் பெ.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி: தொழிற்சாலைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத் தோட்ட நிறுவனங்கள், 5 மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளா்களைக் கொண்ட கடைகள், உணவகங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு, அவா்களது பங்காக ரூ.10, வேலையளிப்பவரின் பங்காக ரூ.20 என மொத்தம் ரூ.30-ஐ தொழிலாளா் நல நிதி பங்குத் தொகையாகச் செலுத்த வேண்டும். இதன்படி, நிகழ் ஆண்டுக்கான (2020) தொழிலாளா் நலநிதியைச் செலுத்துவதற்கான அவகாசம் 2021 ஜனவரி 31 ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.
நலநிதியை இணையவழியில் செலுத்துவதற்கு வசதியாக புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே, நல நிதியை இணையவழியிலோ அல்லது செயலா், தமிழ்நாடு தொழிலாளா் நலநிதி வாரியம், சென்னை -600006 என்ற பெயருக்கு வங்கி வரைவோலை எடுத்து மேற்குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்றாா்.