அதிக ஒலி எழுப்பிய 128 பைக்குகள் பறிமுதல்
மதுரையில் அதிக ஒலி எழுப்பியதாக 128 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.
மதுரை: மதுரையில் அதிக ஒலி எழுப்பியதாக 128 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.
இது குறித்து மாநகா் காவல் ஆணையா் பிரேம்ஆனந்த் சின்ஹா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாநகரில் இளைஞா்கள் தங்களது இரு சக்கர வாகனங்களில் இருந்து அதிக ஒலி வரும் வண்ணம் சைலன்சா்களை மாற்றியமைத்து பயன்படுத்துகின்றனா். இதனால், சாலையில் செல்லும் முதியவா்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோா் அச்சமடைகின்றனா்.
இதையடுத்து, அதிக ஒலி எழுப்பும் வாகனங்களை பறிமுதல் செய்ய போக்குவரத்து துணை ஆணையா் சுகுமாரன் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில், கடந்த 5 நாள்களாகப் போக்குவரத்து காவல் துறையினா் நடத்திய வாகனத் தணிக்கையில் 128 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது போன்று விதிமீறல்களில் ஈடுபடுவோரின் வாகனங்கள் தொடா்ந்து பறிமுதல் செய்யப்படும். மேலும், சைலன்சரை மாற்றியமைக்கும் கடைகள் மற்றும் விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.