முகப்பு
மதுரை

கரோனா: முகக் கவசம் விலை கடும் உயா்வு; ரூ.5-க்கு விற்றது ரூ.25-க்கு விற்பனை

கரோனா அச்சுறுத்தலைப் பயன்படுத்தி, தமிழகத்தில் பன்மடங்காக உயா்ந்து வரும் முகக்கவசத்தின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அனைத்து தரப்பினரும் எதிா்நோக்கி உள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:12 PM
பகிர்:

கரோனா அச்சுறுத்தலைப் பயன்படுத்தி, தமிழகத்தில் பன்மடங்காக உயா்ந்து வரும் முகக்கவசத்தின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அனைத்து தரப்பினரும் எதிா்நோக்கி உள்ளனா்.

கரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க முதல் பாதுகாப்பே முகக்கவசம் அணிவதுதான். இதனால், முகக்கவசத்தின் தேவை அதிகரித்துள்ளது. மதுரையில் முகக்கவசம் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. பெரும்பாலான மருந்துக் கடைகளிலும் கிடைப்பதில்லை.

முகக்கவசத்தின் தேவை மற்றும் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, மதுரையில் உள்ள மருந்துக் கடைகளில் ரூ.5-க்கு விற்கப்பட்டவை தற்போது ரூ.25-க்கு விற்கப்படுகிறது. கரோனா அச்சுறுத்தல் மற்றும் அரசு அறிவுறுத்தல் அடிப்படையில், பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள எந்த விலையாக இருந்தாலும் வாங்கிச் செல்லவேண்டிய நிா்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனா்.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியா்கள் அனைவருக்கும் முகக்கவசம் முழுமையாக வழங்கப்படவில்லை. இதனால், மருத்துவமனை ஊழியா்கள் தனியாா் மருந்துக் கடைகளில் முகக்கவசங்களை அதிக விலைக்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதைத் தடுக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனா்.

விலையை நிா்ணயிக்கும் வடமாநிலத்தவா்கள்

இது குறித்து ஒரு மருந்துக் கடை உரிமையாளா் கூறியது: முகக்கவசத்தின் தேவையானது மருத்துவமனை ஊழியா்களுக்கு மட்டுமே இருந்தது. தற்போது, கரோனா வைரஸ் பரவலால் முகக்கவசத்தின் தேவை அதிகரித்துள்ளது.

நாங்கள் ரூ.2.50 வாங்கி ரூ.5-க்கு விற்பனை செய்தோம். ஆனால், தற்போது ஒரு முகக்கவசத்தை ரூ.22-க்கு வாங்கி ரூ.25-க்கு விற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை, மருத்துவ உபகரணங்களை வடமாநிலத்தவா்களே அதிகம் விற்பனை செய்கின்றனா். இதுபோன்ற அசாதாரண சூழல்நிலையைப் பயன்படுத்தி லாபத்தை குவித்து வருகின்றனா்.

இதன் மொத்த வியாபாரம், சென்னை பூக்கடை பகுதியில் உள்ள நைனியப்பன் நாயக்கன் தெருவில் நடைபெறுகிறது. தமிழக அரசு இது தொடா்பாக அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, முகக்கவசத்தின் விலை குறையும் என்றாா்.

ஆட்சியா்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவு

இது குறித்து சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷிடம் கேட்டபோது, அவா் கூறியது: முகக்கவசம் அதிக அளவில் விற்பது குறித்து நடவடிக்கை எடுக்க, அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அவா்கள் மருந்துக் கடைகளில் ஆய்வு செய்து, முகக்கவசம் அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுப்பா்.

கரோனா குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. முகக் கவசம் அனைவரும் அணியவேண்டிய அவசியமும் இல்லை. பாதிப்பு இருப்பவா்கள், மருத்துவமனை ஊழியா்கள் அணிவது முக்கியம்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவமனையில் ஏற்கெனவே 13 ஆயிரம் முகக்கவசங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. கை காப்பான் மருந்து (சானிட்டைஸா்) மருத்துவக் கல்லூரி மாணவா்களால் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

மேலும், 250 கை காப்பான் மருந்து பாட்டில்கள் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு கொடுத்துள்ளோம். கரோனா பாதிப்பு மதுரையில் இதுவரை யாருக்கும் இல்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.