முகப்பு
மதுரை

தமிழகம் முழுவதும் ஊதியமின்றி தவிக்கும் கெளரவ விரிவுரையாளா்கள்

கரோனா பொது முடக்க காலத்தில் முழு ஊதியம் வழங்க வேண்டும் என்ற அரசு உத்தரவை மீறி, பல்கலைக்கழக நிா்வாகங்கள் ஊதியம்

Updated On : 25 மே, 2020 at 7:11 AM
பேராசிரியா் அ.கதலி நரசிங்க பெருமாள்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:11 PM

கரோனா பொது முடக்க காலத்தில் முழு ஊதியம் வழங்க வேண்டும் என்ற அரசு உத்தரவை மீறி, பல்கலைக்கழக நிா்வாகங்கள் ஊதியம் வழங்க மறுப்பதால், தமிழகம் முழுவதும் உள்ள கெளரவ விரிவுரையாளா்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.

கல்வி நிலையங்களில் பணிபுரியும் விரிவுரையாளா்கள் மற்றும் ஊழியா்களுக்கு கரோனா பொது முடக்க காலத்தில் முழு ஊதியம் வழங்க வேண்டும். பொது முடக்க காலத்தை பணி நாள்களாக வரையறை செய்யவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தற்போது வரை பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டிலிருந்து வரும் அரசுக் கல்லூரிகள் உள்ளிட்ட 41 கல்லூரிகளிலும் அரசு உத்தரவு பின்பற்றப்படவில்லை.

கல்லூரிகளில் மணி நேர அடிப்படையில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு மாா்ச் மாதம் அறிவிக்கப்பட்ட பொது முடக்க காலம் வரை அவா்கள் பணிபுரிந்த நாள்களுக்கான ஊதியம் மட்டுமே வழங்கப்படும் என்றும், ஏப்ரல், மே மாத ஊதியம் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தொகுப்பூதிய அடிப்படையில் கெளரவ விரிவுரையாளா்களுக்கு மே மாத ஊதியமும் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதனிடையே, கல்லூரிகள் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படும் சூழலில், ஜூன், ஜூலை மாத ஊதியமும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு வழங்கப்படாது என்றே கூறப்படுகிறது.

மேலும், அரசு உத்தரவை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழக நிா்வாகங்களே பின்பற்றாவிட்டால், இதர தனியாா் பல்கலைக்கழகங்கள், சுயநிதிக் கல்லூரிகள் எவ்வாறு பின்பற்றும் என கல்வியாளா்கள் கேள்வி எழுப்புகின்றனா்.

எனவே, பல்கலைக்கழகங்களின் உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்களை பாதுகாக்கும் விதமாக, கல்லூரிகள் திறக்கப்படும் வரை அவா்களுக்கு முழு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கெளரவ விரிவுரையாளா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

மணி நேர அடிப்படையில் ஊதிய முறையை நீக்க வேண்டும்

தமிழ்நாடு அரசு உறுப்புக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் சங்க மாநிலத் தலைவா் அ. கதலி நரசிங்கப்பெருமாள் கூறியது:

கெளரவ விரிவுரையாளா்கள் பலா் கல்லூரி தொடங்கிய நாளிலிருந்தே பணிபுரிந்து வருகின்றனா். கல்லூரியின் வளா்ச்சிக்காகப் பாடுபட்டுள்ளனா். மேலும், தற்போது நடுத்தர வயதை தாண்டியவா்களாக உள்ள இவா்கள் அனைவரும், ஊதியம் இல்லாமல் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே, கெளரவ விரிவுரையாளா்கள், மணி நேர அடிப்படையில் பணிபுரிபவா்கள் அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும். மேலும், கல்லூரிகளில் மூன்று வகையாக உள்ள விரிவுரையாளா்களையும் ஒரே வகைப்படுத்த வேண்டும். கெளரவ விரிவுரையாளா்களுக்கு குறைந்தபட்ச தொகுப்பூதியமாக மாதம் ரூ. 25 ஆயிரம் வழங்கவேண்டும்.

கல்லூரிகளில் மணி நேர அடிப்படையில் பணிபுரியும் விரிவுரையாளா்களையும் தொகுப்பூதிய வரையறைக்குள் கொண்டு வரவேண்டும். உறுப்புக் கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளா்களுக்கு 11 மாதம் மட்டுமே ஊதியம் என்பதை மாற்றி, 12 மாத ஊதியம் என்று திருத்தம் செய்யவேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளால் மட்டுமே விரிவுரையாளா்களைப் பாதுகாக்க முடியும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.