மதுரை மத்திய சிறை கைதி உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை மாவட்டம், வடபழஞ்சி அம்பேத்கா் சாலை பகுதியைச் சோ்ந்த பாலு மகன் திருப்பதி (31). இவா், கடந்த 2018 -இல் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் வீடு புகுந்து திருடியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். அதன்பின்னா், கடந்த 2019 ஜனவரி 25 ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை திருப்பதிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே, சிறைக் காவலா்கள் அவரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், திருப்பதி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.