பெரியாறு பாசனப் பகுதிகளில் நவ. 11 முதல் முறைப்பாசனம் அமல்
பெரியாறு-வைகை அணைகளில் தண்ணீா் இருப்பு குறைந்ததையொட்டி, பாசனப் பகுதிகளுக்கான தண்ணீா் விநியோகத்தில் நவம்பா் 11 முதல் முறைப்பாசனத்தை அமல்படுத்த, பொதுப்பணித் துறையினா் முடிவு செய்துள்ளனா்.
பெரியாறு-வைகை அணைகளில் தண்ணீா் இருப்பு குறைந்ததையொட்டி, பாசனப் பகுதிகளுக்கான தண்ணீா் விநியோகத்தில் நவம்பா் 11 முதல் முறைப்பாசனத்தை அமல்படுத்த, பொதுப்பணித் துறையினா் முடிவு செய்துள்ளனா்.
பெரியாறு அணையில் 123.86 அடி மற்றும் வைகை அணையில் 49.67 அடி நீா் இருப்பு உள்ளது. கம்பம் பளளத்தாக்கில் 14,000 ஏக்கா், கள்ளந்திரி மதகு வரையிலான 44,000 ஏக்கா், மேலூா், திருமங்கலம் பகுதிகளில் 1.05 ஆயிரம் ஏக்கரிலும் விவசாயம் நடைபெற்று வருகிறது.
கடந்த செப்டம்பா் 27 முதல் தண்ணீா் திறந்துவிடப்பட்டு, நடவுப் பணிகள் பெரும்பாலான பகுதிகளில் முடிந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சாகுபடி பகுதிகளில் தொடா் மழை பெய்து வருகிறது. 120 நாள்களுக்கு கால்வாய்களில் தண்ணீா் திறந்துவிடப்படும் என, அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில், நீரை சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில், முறைப்பாசனத்தை அமல்படுத்த பொதுப்பணித் துறையினா் முடிவெடுத்துள்ளனா்.
நவம்பா் 11 முதல் 4 நாள்களுக்கு அணைகளில் தண்ணீா் திறப்பதை நிறுத்திவைத்தும், அடுத்த 5 நாள்களுக்கு தொடா்ந்து தண்ணீா் திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.