மதுரையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
படைப்புழு தாக்கத்தால் சாகுபடி பாதிப்பு ஏற்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு பயிர்காப்பீடு இழப்பீட்டு தொகையை வழங்கக் கோரி விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
படைப்புழு தாக்கத்தால் சாகுபடி பாதிப்பு ஏற்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு பயிர்காப்பீடு இழப்பீட்டு தொகையை வழங்கக் கோரி விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டத்தில் சேடபட்டி, தே கல்லுப்பட்டி, திருமங்கலம் கள்ளிக்குடி உள்ளிட்ட வட்டாரங்களில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. கடந்த 2018 -19 ஆம் ஆண்டில் மக்காச் சோளப் பயிர்களில் படைப்புழு தாக்கியது. இதனால் மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு மிக தாமதமாகவே இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
தே கல்லுப்பட்டி வட்டாரத்தில் கோபிநாயக்கமன்பட்டி, கோபாலபுரம், ரெட்டியபட்டி, வையூர் சிலார்பட்டி, கண்ணாபட்டி சின்னமுத்தூர், ராயபுரம், சுப்புலாபுரம், செங்குளம், வெங்கடாசலபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மக்காச்சோளத்துக்கு பயிர் காப்பீடு செய்துள்ளனர். இதில் மோதகம் கிராமத்திற்கு மட்டும் பயிர் இழப்பீட்டுத் தொகை இதுவரை கிடைக்கவில்லை.
இதுகுறித்து விவசாயிகள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமையில் மோதகம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பயிர் காப்பீடு செய்ததற்கான இழப்பீடு தொகையை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.