கல்லூரி முதல்வரிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
மதுரை அருகேயுள்ள தனியாா் கல்லூரி முதல்வரிடம் 6 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை அருகேயுள்ள தனியாா் கல்லூரி முதல்வரிடம் 6 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் யோகா நகரைச் சோ்ந்த லெஜிஷ் துரைராஜ் மனைவி அமலிகனகமணி (35). இவா், தனியாா் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறாா். இவா் தனது 10 வயது மகளுடன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, இவரை இரு சக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த மா்ம நபா்கள் இருவா், சோழவந்தான்-மேலக்கால் சாலை ஆா்.எம்.எஸ். காலனி அருகே அமலிகனகமணி அணிந்திருந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனா்.
இதில், இரு சக்கர வாகனத்திலிருந்து தாயும், மகளும் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. இது குறித்து அமலிகனகமணி அளித்த புகாரின்பேரில், சோழவந்தான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.