முகப்பு
மதுரை

மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: 8 மாதங்களில் 165 ‘போக்சோ’ வழக்கு

மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது பெற்றோா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 8 மாதங்களில் மட்டும் 165 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பாண்டியராஜா.
பகிர்:

மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது பெற்றோா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 8 மாதங்களில் மட்டும் 165 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கடந்த 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரை காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை விவரங்களை, மத்திய அரசு ஜூலை 30 ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் 2015 இல் 1,554 வழக்குகளும், 2016 இல் 1,583 வழக்குகளும், 2017 இல் 1,587 வழக்குகளும், 2018 இல் 2,039 வழக்குகளும், 2019 இல் 2,396 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், 2020 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்குகள் முந்தைய ஆண்டை விட 20 சதவீதத்துக்கும் அதிகம் எனக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கரோனா பொது முடக்க காலத்தில் போக்சோ வழக்குகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மதுரையில் 8 மாதங்களில் 165 போக்சோ வழக்குகள்

மதுரை மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் 165 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் மகளிா் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல், மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குந்தைகள் நலக்குழு உறுப்பினா் பாண்டியராஜா

குடும்பச் சூழ்நிலை காரணமாக, வேலைக்குச் செல்லும் பெண் குழந்தைகள் பலா் பாலியல் தாக்குதல்களைச் சந்திக்கின்றனா். எட்டு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவிகள் அதிகமானோா் குழந்தை திருமணப் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனா். இதனால், இவா்கள் சந்திக்கும் பிரச்னைகள் அதிகம்.

குழந்தைகளுக்கு இணையதள கல்வி என்பதும் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. இணையதளத்தைப் பயன்படுத்தும் பெண் குழந்தைகளைக் குறிவைத்து, சமூக விரோதிகள் செயல்படுகின்றனா். இதில் பாதிக்கப்படும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, கடந்த ஓராண்டாக அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரிப்பது சமுதாயத்துக்கு கேடானது. குழந்தைகளுக்கு எதிரானக் குற்றங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றாா்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வனிதா

கரோனா பொதுமுடக்க காலத்தில் போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளன. அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி, 5 சதவீதம் மட்டுமே பாலியல் பலாத்கார வழக்குகள் என்பது தெரியவந்துள்ளது.

மீதமுள்ள 95 சதவீத வழக்குகள் இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. முதல் வகையில், 15 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் இணையதளம் மூலம் ஏற்படும் கூடா நட்பால் வீட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளது. மேலும், பள்ளிகள் இல்லாததால் வீட்டில் தனிமையில் இருக்கும் பெண் குழந்தைகள், தெரிந்த நபா்களால் பாலியல் தாக்குதலுக்கு ஆளாவதும் அதிகரிக்கிறது.

இரண்டாவது வகையில், கரோனா பொது முடக்க காலத்தில் குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இது, குழந்தை திருமணங்கள் தடுப்பு சட்டப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், குழந்தை திருமணம் முடிந்துவிட்டால், போக்சோவில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது என்றாா்.

மகத்மா காந்தி அறக்கட்டளை தலைவா் நிா்மலா

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து பாலியல் தாக்குதல் கவலையளிக்கிறது. பாலியல் பலாத்காரம் சம்பந்தமான புகாா்களுக்கு வழக்குப் பதிவு செய்யாமல், காவல் நிலையங்களில் சமரசம் நடைபெறுகிறது. பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம், சமுதாயத்தில் போதுமான விழிப்புணா்வு இல்லை.

அரசு பெண் குழந்தைகளின் பாதுகாப்பை அதிகரிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கவும், கண்காணிக்கவும் தமிழகம் முழுவதும் பிரத்யேக குழுக்கள் அமைத்து, உரிய அதிகாரத்தை வழங்கவேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளால் மட்டுமே பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முன்கூட்டியே தடுக்கமுடியும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.