சட்டக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதி கோரி வழக்கு:மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவு
சட்டக் கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தக் கோரிய வழக்கில் மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
தமிழக அரசு சட்டக் கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தக் கோரிய வழக்கில், மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த புஷ்பவனம் என்பவா் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. எனவே, அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக, சட்டக் கல்லூரிகளில் நவீன மின்னணு நூலகங்கள் மற்றும் வை-ஃபை வசதியை ஏற்படுத்த வேண்டும்.
சட்ட மாணவா்களுக்கு அடையாள அட்டை, தனித்தனி ரகசிய குறியீட்டு எண் வழங்க வேண்டும். சட்ட இதழ்கள், நீதிமன்றங்களில் உத்தரவுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேசிய சட்டக் கல்லூரிகளில் இருப்பது போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை, தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளிலும் ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானா்ஜி, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.